கோவை, மே 23: கோவை புலியகுளம், பஜார் வீதியைச் சேர்ந்தவர் செந்தில்நாதன் (66). இவரது இளைய மகன் பிரபு (32). பிரபு கேரள மாநிலம் பாலக்காட்டில் கட்டுமான நிறுவனத்தில் சூபர்வைசராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மது பழக்கம் இருந்தது. இந்நிலையில், கடந்த 4 நாட்களாக பிரபு மது ஏதும் குடிக்காமல் இருந்துள்ளார். திடீரென மதுவை நிறுத்தியதால், அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல நடந்து கொண்டதாக தெரிகிறது. நேற்று முன்தினம் அவர் தனது தாயாரிடம் வெளியே செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டுப் புறப்பட்டுள்ளார். அதன் பின்னர் பிரபு சுங்கம் பைபாஸ் சாலையில் உள்ள வாலாங்குளத்தில் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தவறி விழுந்தாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
