கொள்ளிடம், மே 22: கொள்ளிடம் அருகே பழையாறு முகத்துவாரம் மற்றும் திருமுல்லைவாசல் முகத்துவாரம் ஆகியவைகளை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்று மீனவர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகம் உள்ளது.இந்த துறைமுகத்திலிருந்து தினந்தோறும் 400 விசைப்படகுகள், 350 பைபர் படகுகள் மற்றும் 200 நாட்டு படகுகள் மூலம் 6,000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். பழையாறு துறைமுகம் அருகே கொள்ளிடம் ஆறு கடலில் கலக்கும் இடமான முகத்துவாரம் அடிக்கடி மண்ணால் தூர்ந்து விடுவதால், துறைமுகத்திலிருந்து கடலுக்குள் விசைப்படகுகள் செல்வதிலும், சென்று திரும்புவதிலும் சிரமம் ஏற்படுகிறது.
