பாலக்காடு, மே 23: ஷொர்ணூர் அருகே புதியதாக வாங்கி ஓட்டி வந்தபோது மின்கம்பத்திலும், தென்னை மரத்திலும் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். பாலக்காடு மாவட்டம் ஷொர்ணூரை சேர்ந்தவர் ஷியாம்சங்கர் (30). இவர் புதிய கார் ஒன்றை பட்டாம்பி ஷோரூமில் வாங்கினார். அந்த காரில் நண்பர்களான ஷொர்ணூர் கவளப்பாறையைச் சேர்ந்த கோபகுமார் (29), சுதீஷ் (30) ஆகியோருடன் ஷியாம்சங்கர் பட்டாம்பியிலிருந்து ஷொர்ணூருக்கு நேற்று மாலை சென்றுகொண்டிருந்தார்.
காரை கோபகுமார் ஓட்டி சென்றார். கவளப்பாறை சாலையில் சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து ஓடி சாலையோரம் இருந்த மின்கம்பம் மற்றும் தென்னை மரத்தில் மோதி நின்றது.
இந்த விபத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஷொர்ணூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவலளித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் காருக்குள் சிக்கிய 3 பேரையும் மீட்டு வாணியம்குளத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் கோபகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஷொர்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
