திருவள்ளூர், மே 23: திருவள்ளூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகளின்றி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது சம்மந்தமாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகம், இ-சேவை மையம், நில அளவையர் அலுவலகம் போன்ற பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வரும் வளாகத்தின் பின்புறம் 2 சார் பதிவாளர் அலுவகங்கள் செயல்பட்டு வருகிறது. அதாவது, இணை சார் பதிவாளர் அலுவலகம் 1ல் 45 கிராமங்களை சேர்ந்தவர்களுக்கும், இணை சார் பதிவாளர் அலுவலகம் 2ல் 35 கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
பொதுமக்களின் வசதிக்காக ஒரே கட்டிடத்தில் 2 அலுவலகங்களாக செயல்பட்டு வரும் நிலையில், ஒவ்வொரு அலுவலகத்திலும் 100 நபர்களுக்கு பத்திரப்பதிவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்காக ஆன்லைனில் விண்ணப்பித்து, அதன்படி வாடிக்கையாளர்களுக்கு பத்திரப்பதிவு செய்யப்படுவது வழக்கம். குறுகிய இடத்தில் இந்த அலுவலகம் செயல்பட்டு வருவதால், நிலத்தை விற்பனை செய்பவர்கள், அதனை வாங்குபவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என 500க்கும் மேற்பட்டோர் அங்கு நாள்தோறும் வந்து செல்கின்றனர். இதனால், அந்த சார் பதிவாளர் அலுவலகம் முன்பும், அலுவலகத்திற்குள்ளும் கூட்டம் நிரம்பி வழியும். இதனால் பொதுமக்கள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகி வருவதுண்டு.
இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதில், தமிழ்நாட்டில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களை நிற்க வைத்து பேசக்கூடாது. அவர்களை உட்கார வைத்து உரிய மரியாதையுடன் நடத்த வேண்டும். அனைத்து அலுவலகங்களும் போதுமான இருக்கை வசதிகளை உறுதி செய்ய வேண்டும். மேலும், இது சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட வேண்டும் என்பதாகும்.
ஆனால், திருவள்ளூரில் உள்ள இணை சார்பதிவாளர் அலுவலக வாசலில் பொதுமக்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த இருக்கையில் ஒரு சிலர் அமர்ந்து கொண்டிருக்கின்றனர். மற்ற அனைவரும் நின்று கொண்டிருப்பதை காண முடிகிறது.
அதேபோல், அலுவலகத்திற்குள்ளும் மக்கள் கூட்டமாக நிற்பதையும் காணமுடிகிறது. எனவே, முதலமைச்சரின் உத்தரவை காற்றில் பறக்கவிடும் வகையில், பத்திரப்பதிவுத் துறையின் அலட்சியத்தால் பொதுமக்கள் நீண்ட நேரம் நிற்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர். எனவே, முதலமைச்சரின் உத்தரவை அமல்படுத்த சம்மந்தப்பட்ட துறை நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதே நேரத்தில் வட்டாட்சியர் அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம், இ-சேவை மையம், நில அளவையர் அலுவலகம் போன்ற பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வரும் நிலையில்,
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த அலுவலக்கங்களுக்கு வந்த செல்லக்கூடிய சூழ்நிலையில் அத்தியாவசிய தேவையான குடிநீர், கழிவறை போன்ற வசதிகள் இல்லாததாலும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும், அதிகாரிகள் மெத்தனத்தால் பொதுமக்கள் படும் இன்னல்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
