ஆண்டிபட்டி, மே 22: தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, தேனி மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் அங்குள்ள உள்நோயாளிகள் வார்டுகளில் போதிய சுகாதாரமின்மை காரணமாக எலிகள் சர்வ சாதாரணமாகச் சுற்றித் திரிவதாகவும், நோயாளிகளின் படுக்கைகளில் ஓடி அவர்களுக்கு வழங்கப்படும் உணவுகளை உண்பதால் புதிய நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் புகார்கள் எழுந்தன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் நோயாளி ஒருவர் தனது மொபைல் போனில் படம் பிடித்த எலிகள் உலா வரும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
