வேதாரண்யம், மே 19: வேதாரண்யத்தில் கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்களும் விவசாயிகளும் கவலை அடைந்துள்ளனர். வேதாரண்யம் பகுதியில் ஏப்ரல், மே மாதங்களில் தெற்கு திசையில் இருந்து வழக்கத்தைவிட பலமான கடல் காற்று வீசுவது வழக்கம். இந்த காற்றை வைகாசி விசாகக் காற்று என பொதுமக்கள் அழைக்கின்றனர். இந்த பகுதியில் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களை ஒட்டி கடல் நீர்மட்டம் உயர்ந்து காற்றின் வேகம் அதிகரிப்பதும் இயல்பானது. வேதாரண்யம் கடலோரப் பகுதியில் வழக்கத்தை விட வேகமான கடல் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில் கடல் நீர்பெருக்கெடுத்து வாய்மேடு, தென்னடா கிராமங்களிடையே முள்ளி ஆற்றில் கழிமுகப்பகுதியான கண்டி என்னும் வழியே புது ஆறு பகுதியில் உப்பு நீர் புகுந்துள்ளது.
