×

வேலூர் செங்கல்சூளைகளில் மாமூல் கேட்டு தவெக நிர்வாகிகள் மிரட்டல்

 

* தட்டி கேட்டவர்களுக்கு ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை
* வீடியோ வைரல்: போலீசில் உரியமையாளர்கள் புகார் மனு
* ‘நடப்பது எங்க ஆட்சி, மாதம் ரூ.1 லட்சம் கொடுங்க’

வேலூர், மே 23: வேலூர் கணியம்பாடியில் செயல்படும் செங்கல்சூளைகளில் மாதம் ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டிய தவெக நிர்வாகிகள் தட்டி கேட்டவர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டிய வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக சூளை உரிமையாளர்கள் வேலூர் தாலுகா போலீசில் புகார் அளித்துள்ளனர். தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைந்த நாள் முதல் மாநிலம் முழுவதும் அந்த கட்சியின் நிர்வாகிகள் அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி, வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள் என பல்வேறு இடங்களில் அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரீல்ஸ் டீமுடன் நுழைந்த அந்த கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன், மருத்துவ அலுவலரின் அறையில் அமர்ந்ததுடன், அங்குள்ள பதிவேடுகளை ஆய்வு செய்தது, அலுவலர்கள், பணியாளர்களிடம் அதிகார தொனியுடன் கேள்விகளை கேட்டது, நோயாளிகளிடம் சென்று குறைகளை கேட்டது தொடர்பான ரீல்ஸ் வீடியோக்களை அவர்களே சமூக வலைதளங்களில் வெளியிட்டது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதன் தொடர்ச்சியாக நேற்று வேலூர் அடுத்த கணியம்பாடி பகுதி செங்கல்சூளைகளில் தவெக நிர்வாகிகள் மாமூல் கேட்டு மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணியம்பாடி வட்டாரத்தில் கணியம்பாடி, கணியம்பாடி புதூர், நெல்வாய், வல்லம் என பல இடங்களில் 25க்கும் மேற்பட்ட செங்கல்சூளைகள் இயங்கி வருகின்றன. வேலூர் மாவட்ட கட்டுமான பணிகளின் 40 சதவீத செங்கல் தேவையை கணியம்பாடி பகுதி செங்கல் சூளைகள் பூர்த்தி செய்கின்றன. இந்த செங்கல்சூளைகளை நம்பி 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

இந்த நிலையில் நேற்று மதியம் கணியம்பாடி ஒன்றிய தவெக செயலாளர் விஜயகுமார், நிர்வாகிகள் லோகேஷ், ஈஸ்வரன் உட்பட பலர் கார், பைக்குகளில் கணியம்பாடி புதூரில் இயங்கி வரும் சண்முகம், தினகரன், சுனில்குமார், ரமேஷ், சுமன் ஆகியோரின் செங்கல்சூளைகளில் அத்துமீறி நுழைந்தனர். தொடர்ந்து செங்கல்சூளை உரிமையாளர்களிடம், ‘நடப்பது எங்க ஆட்சி. எங்களுக்கு மாதா மாதம் ரூ.1 லட்சம் மாமூல் கொடுத்தால்தான் சூளையே நடக்கும். இல்லையென்றால் சூளைகளை இழுத்து மூடுவோம்’ என்று மிரட்டல் விடுத்து அட்டகாசத்தில் ஈடுபட்டார்களாம்.

இதையடுத்து செங்கல்சூளை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் திரண்டு அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது தவெகவினர் ஆபாச வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்தனர். தகவல் அறிந்து கணியம்பாடி புதூர் செங்கல்சூளை பகுதிக்கு விரைந்து சென்ற வேலூர் தாலுகா போலீசார், இருதரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். ஆனால் ெசங்கல்சூளை உரிமையாளர்கள் சண்முகம், தினகரன், சுனில்குமார், ரமேஷ், சுமன் மற்றும் பொதுமக்கள் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தாலுகா போலீசாரிடம் புகார் மனு அளித்தனர்.

இதற்கிடையில் செங்கல்சூளைகளில் தவெக நிர்வாகிகள் அத்துமீறி மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பான வீடியோ பதிவுகள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக செங்கல்சூளை உரிமையாளர்கள், தொழிலாளர்களிடம் கேட்டபோது, ‘இப்பவே இவர்களின் அராஜகம் தாங்க முடியவில்லை. இவர்களுக்கு ஓட்டு போட்டதற்கு இன்னும் என்னென்ன அனுபவிக்கணுமோ தெரியலேயே. ஏற்கனவே ஆட்சியில் இருந்த கட்சிகளின் நிர்வாகிகள் யாரும் இதுபோன்று எங்களை மாமூல் ேகட்டு மிரட்டியதில்லை.

என்ன செய்வது?’ என்று சலித்துக் கொண்டனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கேட்டபோது, ‘செங்கல்சூளைகளில் தவெக நிர்வாகிகள் மாமூல் கேட்டு மிரட்டியதால் ஏற்பட்ட தகராறு குறித்து தெரிய வந்ததும், அங்கு சென்று இருதரப்பையும் சமாதானப்படுத்தி விலக்கிவிட்டோம். அவர்களும் சென்று விட்டனர். செங்கல்சூளைகள் தரப்பில் புகார் மனு அளித்துள்ளனர். யாரையும் பிடித்து வந்து எங்களிடம் ஒப்படைக்கவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.

 

Tags : Vellore ,Kaniyambadi ,
× RELATED வேலூர் சரக டிஐஜி மகேஷ் பொறுப்பேற்பு: எஸ்பி அலுவலகத்தில் ஆய்வு