×

மக்களைப் பற்றி சிந்திப்பதில் மு.க.ஸ்டாலினைப் போல் எவருமில்லை

 

திருச்செந்தூர், மே 23: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை போல் மக்களைப் பற்றி சிந்திப்பதில் தலைவர் எவருமில்லை என்று அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தெரிவித்தார். திருச்செந்தூரில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, நிருபர்களிடம் கூறியதாவது: முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு ஜூன் 3ம் தேதி திருச்செந்தூர், வைகுண்டம் மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ- மாணவியருக்கு உயர் தர மடிக்கணினிகள் வழங்கப்படும். அதிமுக மற்றும் காங்கிரசில் இருந்து விலகிப் பலர் திமுக தலைவரின் தலைமையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்கான விழா, வரும் 28ம் தேதி நடக்கிறது. திமுக, திராவிட கலாசாரத்தைப் பாதுகாக்கக் கூடிய இயக்கம் என்பதால் அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி குறித்து திமுக தலைவரே இறுதி முடிவு எடுப்பார். திருச்செந்தூரை திருப்பதிபோல் மாற்றிட எல்லாவிதத்திலும் சட்டமன்றத்தில் போராடி பெற்று தருவேன். திருச்செந்தூர் தொகுதியில் புதிய பாதாள சாக்கடை திட்டத்தைக் கொண்டு வருவதற்கும, பக்தர்கள் குளிப்பதற்கும் மற்றும் இதர தேவைகளுக்கும் வசதிகளை மேம்படுத்தவும், 1000 ஏக்கரில் கார் பார்க்கிங் வசதி அமைத்து அங்கிருந்து கோயிலுக்குச் செல்வதற்கான உள்கட்டமைப்பை முறைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். காயல்பட்டினத்தில் மழைநீர் தேங்குவதைத் தடுக்க முறையான வடிகால் அமைப்புகள் ஏற்படுத்தப்படும். உடன்குடி மற்றும் சாத்தான்குளம் பகுதிகளில் தாமிரபரணி ஆற்றுநீர் வீணாவதைத் தடுத்து, நிலத்தடி நீரைப் பாதுகாப்பதற்கான திட்டங்கள் சட்டமன்றத்தில் வலியுறுத்தப்படும்.

திருச்செந்தூர் கோயிலில் நிகழ்ந்த ஊழல் முறைகேடு தொடர்பாக தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. தமிழகம் முழுவதும் இன்று பல்வேறு வகையில் பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். சினிமாவைப் போல் நடித்தால் மட்டும் போதாது. அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். மக்களைப் பற்றி சிந்திப்பதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை போல் இந்தியாவிலேயே தலைவர் எவருமில்லை, என்றார். பேட்டியின்போது திமுக வர்த்தக அணி மாநில இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், மாவட்ட அமைப்பாளர்கள் இளைஞரணி ராமஜெயம், விளையாட்டு மேம்பாட்டு அணி ஜனகர், ஒன்றிய செயலாளர்கள் செங்குழி ரமேஷ், சதீஷ்குமார், நவீன், உடன்குடி ஒன்றிய பொறுப்பாளர் மதன்ராஜ், திருச்செந்தூர் நகர செயலாளர் வாள் சுடலை, திருச்செந்தூர் நகர்மன்ற தலைவர் சிவஆனந்தி, நகர்மன்ற உறுப்பினர்கள் ரேவதி, சோமசுந்தரி, முத்து ஜெயந்தி, அந்தோணிட்ரூமன், மகேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பதவி வரும்போது பணிவு வர வேண்டும்
எதிர்க்கட்சியான பிறகு அதிவேகமாக செயல்படுகிறீர்களே? என்று அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏவிடம் நிருபர்கள் கேட்டதற்கு, எதிர்க்கட்சியாக இருக்கும்போது களத்தில் வேகமாக இருக்க வேண்டும். ஆளுங்கட்சியாக இருக்கும் போது எம்ஜிஆர் பாடலைபோல் பதவி வரும்போது பணிவும் வர வேண்டும், துணிவும் வர வேண்டும் என்பதுபோல் நடப்போம். திமுக வளர்ச்சிக்காக எனது குரல் எப்போதும் ஒலிக்கும் என்றார்.

கறவை மாடுகள் ஆடுகள் வழங்கல்
நேற்று சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வந்த அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, தொகுதிக்குட்பட்ட திருச்செந்தூர், உடன்குடி மற்றும் ஆழ்வார்திருநகரி ஒன்றியத்திற்குட்பட்ட 3 பேருக்கு தலா 1 கறவை மாடு, 4 பேருக்கு தலா 5 ஆடுகளை வழங்கினார்.

 

Tags : M.K. Stalin ,Tiruchendur ,Anitha Radhakrishnan ,MLA ,DMK ,Chief Minister ,Kalaignar… ,
× RELATED வேலூர் செங்கல்சூளைகளில் மாமூல் கேட்டு தவெக நிர்வாகிகள் மிரட்டல்