வருசநாடு, மே 18: கடமலை-மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட கண்டமனூர், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, குமணந்தொழு உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் மாலை நேரங்களில் சிக்கன் மற்றும் மீன் பொரித்து விற்பனை செய்யும் கடைகள் அதிகளவில் உள்ளன. இந்த கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முறையான சோதனைகளை மேற்கொள்வதில்லை. இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் கடை உரிமையாளர்கள் சிலர், ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் மீண்டும் கொதிக்க வைத்துப் பயன்படுத்துகின்றனர். உணவக உரிமையாளர்கள் ஒருசிலர், விற்பனையாகாமல் கெட்டுப்போகும் நிலையில் உள்ள மீன்களைப் பொரித்து விற்பனை செய்வதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் பொதுமக்களை கவர்வதற்காக சிக்கன் மற்றும் மீன்களில் தடை செய்யப்பட்ட அடர் சிவப்பு நிறமிகளை அதிகளவில் சேர்த்து விற்பனை செய்வதாகவும் பொதுமக்கள் மத்தியில் புகார்கள் எழுந்துள்ளன.
