வாஷிங்டன்: பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘லவ் இஸ் பிளைண்ட்’ மூலம் இணைந்த செல்சி கிரிபின் மற்றும் குவாம் அப்பியா தம்பதியினர் நான்கு வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து செய்துள்ளனர். கடந்த 2022ம் ஆண்டு ‘லவ் இஸ் பிளைண்ட்’ என்ற ரியாலிட்டி டிவி நிகழ்ச்சியில் பங்கேற்று காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை செல்சி கிரிபின் (35) மற்றும் நடிகர் குவாம் அப்பியா (37 ஜோடி, தங்களது நான்காவது காதலர் தினத்தை உற்சாகமாக கொண்டாடியதோடு, சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியான பதிவுகளையும் பகிர்ந்தனர்.
ஆனால் கடந்த சில வாரங்களாக இவர்களது உறவில் விரிசல் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இருவரும் அதிகாரப்பூர்வமாக பிரிந்துள்ளனர். கடந்த மார்ச் 18ம் தேதி செல்சி கிரிபின் வெளியிட்ட புகைப்படங்களில் திருமண மோதிரம் அணியாதது சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 26ம் தேதி அவர் தனது பிறந்தநாளை கொண்டாடியபோது, குவாம் அப்பியா அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. மேலும் கடந்த 7ம் தேதி வந்த தங்களது 4வது திருமண நாளன்று எந்த பதிவையும் அவர்கள் வெளியிடவில்லை.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவரின் பெயரையும் செல்சி நீக்கினார். இது குறித்து இருவரும் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எங்களது திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவது இதயத்தை உடைக்கும் செயலாக உள்ளது, எங்களது எதிர்கால இலக்குகள் ஒன்றாக இல்லாததால் இந்த கடினமான முடிவை எடுத்துள்ளோம்’ என்று தெரிவித்துள்ளனர். இவர்களின் விவாகரத்து தகவல் வெளியானதால் அவர்களது ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.
