×

வேலூர்- ஆற்காடு சாலையில் கார்களை நிறுத்தி பட்டப்பகலில் மது குடித்துவிட்டு பாட்டில்கள் வீச்சு

*நடந்து செல்லும் பெண்களை கேலி கிண்டல்

*போலீசார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வேலூர் : பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த வேலூர்- ஆற்காடு சாலையில் கார்களை நிறுத்தி பட்டப்பகலில் மதுகுடித்துவிட்டு பாட்டில்கள் வீசிவிட்டு செல்வதுடன் சாலையோரம் நடந்து செல்லும் பெண்களிடம் கேலி கிண்டல் செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தில் பஸ்நிலையங்கள், கோயில்கள், பள்ளிகள் அருகில் இருந்த 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் 6 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது.

குறிப்பாக வேலூர் பழைய, புதிய பஸ்நிலையங்களில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. இருப்பினும் வேலூர்-ஆற்காடு சாலையில் உள்ள காகிதப்பட்டரை பகுதியில் இன்னும் 2 கடைகள் செயல்பட்டு வருகிறது.

எப்போதும் குடிமகன்களின் கூட்டம் அலைமோதி வரும். தற்போது நகர பகுதியில் மட்டும் 4 கடைகள் மூடப்பட்டுள்ளதால் ஒட்டுமொத்த குடிமகன்களும் காகிதப்பட்டரை டாஸ்மாக் கடைகளின் முன்பு பகல் 12 மணிக்கு முன்பே குவிந்து விடுகின்றனர். இதனால் கடை திறந்ததும் முட்டி மோதி மதுபாட்டில்களை வாங்கி செல்வதுடன் சிலர் அங்கேயே அட்ராசிட்டியிலும் ஈடுபடுவதால் அந்த பகுதி மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் வேலூர்- ஆற்காடு சாலை காலை முதல் இரவு வரை எப்போதும் போக்குவரத்தும், பொதுமக்கள் மிகுந்த சாலையாக இருந்து வருகிறது. இந்த சாலையோரத்தில் வரிசையாக கார்களை நிறுத்தும் ஆசாமிகள் நேற்று பட்டப்பகலில் காரிலேயே அமர்ந்தபடி மதுகுடித்தனர். வேலூர் எல்ஐசி அலுவலகம் எதிரே காரில் அமர்ந்தபடியே மது குடித்துவிட்டு பாட்டில்களை வீசிவிட்டனர்.

பின்னர் அந்த வழியாக சாலையில் நடந்து சென்ற பெண்களிடம் கேலி, கிண்டலில் ஈடுபட்டனர். இதனால் அவர்கள் அச்சத்துடன் அங்கிருந்து சென்றனர்.

இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதேநிலை ஆற்காடு சாலை முழுவதும் உள்ளதால், பொதுமக்கள் வியாபாரிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:

வேலூர் பழைய, புதிய பஸ்நிலையத்தில் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் குடிமகன்கள் அனைவரும் காகிதப்பட்டரையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வருகிறார்கள். மது பாட்டில்கள் வாங்கிக் கொண்டு ஆற்காடு சாலை ஓரத்தில் ஆங்காங்கே கார்களை நிறுத்தி கும்பல் கும்பலாக மது அருந்தொடங்கி விடுகின்றனர். பகல் மற்றும் இரவு நேரங்களில் அந்த வழியாக நடந்து செல்லவே முடியாத நிலை உள்ளது.

சாலையோரங்கள் அனைத்தும் மது பாராக மாறியுள்ளது. ஆனால் இப்போது போலீசார் அதை கண்டும் காணாமல் இருந்து வருவதால் சாலையோரம் பல இடங்களில் குடிமகன்கள் சகஜமாக குடித்து வருகின்றனர். சாலையோரம் மதுபாட்டில்களாக கிடக்கிறது. எனவே காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து பொது இடங்களில் மது அருந்தும் குடிமகன்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Vellore ,Andhad Road ,Bhatapagal ,Velur- Andhad road ,
× RELATED ஆரணி ஆற்றுப்பாலம் அருகே மது வாங்க சென்றபோது விபத்து: இளைஞர் உயிரிழப்பு