கொடைக்கானல்: கொடைக்கானல் பேத்துப்பாறை கிராமத்தில் குடியிருப்பு அருகே, ஒற்றை யானை முகாமிட்டுள்ளதால், பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைக்கிராமங்களில் கடந்த சில மாதமாக காட்டெருமை, யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக புலியூர், பாரதி அண்ணா நகர், பேத்துப்பாறை, அஞ்சுவீடு, தாண்டிக்குடி, பண்ணைக்காடு உள்ளிட்ட மலைக்கிராமங்களில், விளைநிலங்களில் வந்து முகாமிடும் காட்டுயானைகள் விளைபொருட்களை சேதப்படுத்தி வருகின்றன.
கொடைக்கானல் நகரில் காட்டுமாடுகள் அடிக்கடி உலா வந்து சுற்றுலாப் பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இந்த நிலையில், வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேத்துப்பாறை பகுதியில், குடியிருப்புகள் அருகே நேற்று ஒற்றை காட்டுயானை முகாமிட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன், ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
