×

குமரி அரசு மருத்துவக்கல்லூரியில் ரேடியோ தெரபி மையம் திறப்பு எப்போது?.. கேன்சர் சிகிச்சைக்கு காத்திருக்கும் நோயாளிகள்

 

நாகர்கோவில்: குமரி அரசு மருத்துவக்கல்லூரியில் ரேடியோ தெரபி மையத்தை விரைந்து திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. குமரி மாவட்டத்தில் தற்போது புற்றுநோய் பாதிப்பு அதிகமாக உள்ளது. இயல்பாகவே குமரி மாவட்டத்தில் கடற்கரை மண்ணில் ரேடியேஷன் (கதிரியக்கம்) அதிகம் ஆகும். இந்த கதிரியக்கத்தின் காரணமாக, கடற்கரை கிராமங்களில் பாதிப்பு அதிகளவில் இருக்கிறது. ஆண்டுதோறும் புற்றுநோயால் ஏற்படும் மரணங்கள் அதிகமாக உள்ளன. புற்றுநோயால் பாதிக்கப்பட்டால், குமரியில் அதற்கான சிகிச்சை மையங்கள் இல்லாததால் திருவனந்தபுரத்தில் இருக்கும் மண்டல புற்றுநோய் ஆராய்ச்சி மையத்துக்கு தான் நோயாளிகள் செல்கிறார்கள்.

எனவே குமரி மாவட்டத்தில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்பட வேண்டும் என குமரி மாவட்ட மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த திமுக ஆட்சியில் குமரி மாவட்டத்தில் புற்றுநோய் சிகிச்சைக்காக வசதிகளை மேற்ெகாள்ள முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இது தவிர ஆரோக்கிய அழைப்பு என்ற பெயரில் கன்னியாகுமரி மாவட்டம் உள்பட 4 மாவட்டங்களில் புற்றுநோய் பரிசோதனை தொடங்கப்பட்டது. அந்த வகையில் குமரி மாவட்டத்தில் உள்ள 20 லட்சத்து 3 ஆயிரத்து 460 பேரில் 15 லட்சத்து 63 ஆயிரத்து 614 பேரிடம் புற்றுநோய் பரிசோதனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பரிசோதனை நடந்தது.

இந்த நிலையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், ரூ.4 கோடியில் ரேடியோ தெரபி மையம் அமைப்பதற்கான பணிகள் கடந்த 2024ம் ஆண்டு தொடங்கியது. இதன் கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளன. ரேடியோ தெரபிக்கான கருவிகளும் வந்துள்ளன. மின் இணைப்புகள், குளிர்சாதன வசதிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளன. ஆனாலும் இன்னும் ரேடியோ தெரபி மையம் திறக்கப்பட வில்லை. இதனால் கேன்சர் நோயாளிகளுக்கான சிகிச்சை தாமதம் ஆகிறது. கதிரியிக்க தடுப்பு கருவிகளுக்கான பணமும் மருத்துவக்கல்லூரி நிர்வாகம் செலுத்தி உள்ளது.

ஆனால் ஒன்றிய அரசின், கதிரியிக்க துறையில் இருந்து ஆய்வுக்காக வர வேண்டி உள்ளது. அவர்களின் ஆய்வுக்கு பின் இது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிகிறது. கடந்த திமுக ஆட்சியில் கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ், புற்று நோய் ஆராய்ச்சி மையத்துடன் கூடிய பல்வேறு சிறப்பு சிகிச்சையுடன் கூடிய மருத்துவமனையாக தரம் உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசு முன்னேற்பாடுகளை தொடங்கியது. இது தொடர்பான விரிவான மதிப்பீடு பொதுப்பணித்துறை மூலம் பெறப்பட்டு, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் அலுவலகத்துக்கு, குமரி மருத்துவக்கல்லூரி நிர்வாகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.

மேலும் பொதுப்பணித்துறை (தலைமை பொறியாளர் ) நிதி பெறுவதற்காக விரிவான மதிப்பீட்டை மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சி இயக்குனரகம் அனுப்பியது. தற்போது நிதி பரிசீலனையில் உள்ளது. நிர்வாக அனுமதி கிடைத்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்துடன் கூடிய சிறப்பு மருத்துவமனை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். புதிய அரசு இதை செயல்படுத்துமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Tags : Radiotherapy Center ,Kumari Government Medical College ,Nagercoil ,Kumari district ,
× RELATED கொடைக்கானல் பேத்துப்பாறை கிராமத்தில்...