புதுடெல்லி: மேற்கு ஆசிய மோதல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. இந்தநிலையில், பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள தனது எக்ஸ் பதிவில்,இந்தியாவில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு, தற்போதைய சர்வதேச எரிபொருள் நெருக்கடியோடு, மோடி அரசாங்கத்தில் நிலவும் தலைமைத்துவ நெருக்கடியும், தொலைநோக்குச் சிந்தனையின்மையும், கரைபுரண்டு ஓடும் திறமையின்மையுமே முக்கிய காரணம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இது மோடி அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட நெருக்கடி. இதற்கான விலையை நாட்டு மக்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த விலை உயர்வு தொழில்துறைகள் முதல் குடும்பங்கள் வரை பாதிப்பை ஏற்படுத்துகிறது என குறிப்பிட்டுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் டெரெக் ஓபிரையன் பதிவிடுகையில் ‘‘முதலில் உங்கள் வாக்குகளைச் சூறையாடுகிறார்கள், பிறகு உங்களுக்கு வலிக்கிற இடத்தில் உதைக்கிறார்கள்.
பரிதாபகரமான இந்த நிலை கணிக்கக்கூடியது தான் என்று குறிப்பிட்டுள்ளார். பாஜ தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் அமித் மாள்வியா எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில், முக்கியப் பொருளாதார நாடுகளில் இந்தியா மிகக் குறைந்த விலை உயர்வைப் பதிவு செய்துள்ளதாகவும், அதேவேளையில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் கடுமையான விலை உயர்வுகளைச் சந்தித்துள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.
