போஜ்சாலா-கமல் மவுலா மசூதி வளாகம் சரஸ்வதி கோயில் என்று அறிவிக்கப்பட்டதால் மக்கள் வழிபாடு: அசம்பாவிதங்களை தவிர்க்க 1,200 போலீசார் குவிப்பு

 

தார்: மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள போஜ்சாலா-கமல் மவுலா மசூதி வளாகம், அன்னை சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் என்று உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் பார்மர் வம்சத்தின் ராஜா போஜ் ஆட்சியின் போது கட்டப்பட்ட 11ம் நூற்றாண்டு சமஸ்கிருத கற்றல் மையமாகவும், கோயிலாகவும் இருந்தது என இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) நடத்திய கார்பன் டேட்டிங் மற்றும் அறிவியல் பூர்வ ஆய்வில் 94 சிலைகள், 150க்கும் மேற்பட்ட சமஸ்கிருத கல்வெட்டுகள் மூலம் கண்டறியப்பட்டது. இதன்பேரில் வாரக்கணக்கில் தினசரி விசாரணை நடத்திய மத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி விஜய் குமார் சுக்லா, நீதிபதி அலோக் அவஸ்தி ஆகியோர் அடங்கிய இந்தூர் அமர்வு, நேற்று 242 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை வழங்கியுள்ளது.

இதன் மூலம், செவ்வாய்க்கிழமைகளில் இந்துக்கள் வழிபாடு செய்யவும் வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தவும் அனுமதித்த ஏஎஸ்ஐ அமைப்பின் 2003 ஏப்ரல் மாத ஏற்பாட்டை நீதிமன்றம் முற்றிலும் ரத்து செய்து, இனிவரும் காலங்களில் இந்த தளம் இந்துக்களின் வழிபாட்டிற்கு மட்டுமே பிரத்தியேகமாக அங்கீகரிக்கப்படும் என உத்தரவிட்டது. மேலும், முஸ்லிம் சமூகத்தின் மத உரிமைகளைப் பாதுகாக்க தார் மாவட்டத்திற்குள் மசூதி கட்ட மாற்று நிலம் ஒதுக்கீடு செய்யக் கோரி விண்ணப்பித்தால் அதனை பரிசீலிக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், 1800ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் கொண்டு செல்லப்பட்டு தற்போது லண்டன் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சரஸ்வதி தேவியின் சிலையை மீண்டும் கொண்டு வர பிரிட்டனுக்கு முறையான தூதரக கோரிக்கைகளை முன்வைப்பது குறித்து பரிசீலிக்குமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த நினைவுச் சின்னத்தின் ஒட்டுமொத்த நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு மேற்பார்வைக் கட்டுப்பாட்டை ஒன்றிய அரசும் ஏஎஸ்ஐ அமைப்பும் தொடர்ந்து பராமரிக்கும். இந்த தீர்ப்பைத் தொடர்ந்து சட்டம் ஒழுங்கை பராமரிக்க 1,200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு தார் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அமைதியைக் காக்குமாறும், சமூக ஊடகங்களில் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் தார் மாவட்ட ஆட்சியர் ராஜீவ் ரஞ்சன் மீனா கேட்டுக்கொண்டுள்ளார். இந்த முடிவை இந்து அமைப்புகள் வரவேற்றுள்ள நிலையில், ஏஎஸ்ஐ அறிக்கைக்கு அதிருப்தி தெரிவித்துள்ள முஸ்லிம் சமூக பிரதிநிதிகள், இந்த உத்தரவை ஆய்வு செய்து உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அதேநேரம் இன்று அந்த கோயிலில் பொதுமக்கள் வழிபாடு செய்தனர். அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories: