புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ்பதிவில் கூறியிருப்பதாவது: இனி போட்டித் தேர்வுகள் எதுவும் இல்லை. இவைதான் உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியைச் சேர்ந்த 21 வயதான ரித்திக் மிஸ்ரா உதிர்த்த கடைசி வார்த்தைகள். மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுதிய இந்த மாணவன், தேர்வு ரத்து செய்யப்பட்ட செய்தியைக் கேட்ட கணமே நிலைகுலைந்து போய் தற்கொலை செய்து கொண்டுள்ளான். கோவாவிலும் கூட, நீட் தேர்வு எழுதிய ஒரு மாணவர் தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.
இந்த மாணவர்கள் தேர்வுகளிடம் தோற்கவில்லை – ஒரு ஊழல் நிறைந்த அமைப்பால் அவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 2015 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் 148 வினாத்தாள் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன. 87 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக 9 கோடி மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதில், ஒரே ஒரு சம்பவத்திற்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சிபிஐ 17 வழக்குகளைக் கையில் எடுத்தது, அமலாக்கத்துறை 11 வழக்குகளை விசாரித்தது.
ஆனால், யாரும் தண்டிக்கப்படவில்லை. பிற மருத்துவத் தேர்வுகளில் மட்டும் 15 முறைகேடுகள் நடந்துள்ளன. இதில் மிகவும் அவமானகரமான விஷயம் என்னவென்றால்: இந்த முறைகேடுகளுக்குப் பொறுப்பான ஒரு அதிகாரியோ அல்லது அமைச்சரோ பதவி விலகவில்லை. அவர்கள் பதவியிலிருந்து நீக்கப்படுகிறார்கள். பின்னர் அமைதியாக உயர் பதவிகளிலேயே மீண்டும் அமர்த்தப்படுகிறார்கள். இந்தத் திருட்டுச் செயல்களை அரங்கேற்றுபவர்களுக்குப் பரிசுகள் கிடைக்கின்றன .
மோடி அவர்களே – உங்கள் பொறுப்புணர்வை தட்டி எழுப்ப, இன்னும் எத்தனை ‘ரித்திக்குகள்’ பலியாக வேண்டும்?. இளம் நண்பர்களே, உங்கள் வலிதான் எனது வலி. உங்கள் எதிர்காலத்தைத் திருடுபவர்கள் நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும். எவ்வளவு காலம் ஆனாலும் சரி, யாரும் தப்பிவிட முடியாது. இது எனது வாக்குறுதி. நாம் அனைவரும் இணைந்து இந்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் – நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று கூறி உள்ளார்.
