சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு: பிரியங்கா காந்தி கணவர் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்

 

புதுடெல்லி: அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள சிகோபூர் கிராமத்தில் கடந்த 2008ம் ஆண்டு தொழிலதிபரும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவரான ராபர்ட் வதேராவுக்குச் சொந்தமான ஸ்கைலைட் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனம், 3.5 ஏக்கர் நிலத்தை ரூ.7.5 கோடிக்கு வாங்கியது. பின்னர், கடந்த 2012ம் ஆண்டு அந்த நிலத்தை டி.எல்.பி நிறுவனத்திற்கு ரூ.58 கோடிக்கு விற்பனை செய்தது. இந்த நில மோசடி பரிவர்த்தனையில் போலியான அறிவிப்புகள் செய்யப்பட்டதாகவும், இதன் மூலம் ரூ.58 கோடி அளவிற்கு சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.

இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஏப்ரல் 15ம் தேதியன்று டெல்லி ராவுஸ் அவென்யூ நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி சுஷாந்த் சாங்கோத்ரா, அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையை ஏற்றுக்கொண்டார். அப்போது, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராபர்ட் வாத்ரா உள்ளிட்ட 9 பேர் மே 16ம் தேதியன்று (இன்று) நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு சம்மன் அனுப்பியிருந்தார். இதற்கிடையே, விசாரணை நீதிமன்றத்தின் சம்மனை எதிர்த்தும், இந்த வழக்கை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சட்டரீதியான அதிகாரம் இல்லை என்று கூறியும் ராபர்ட் வாதேரா டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

ஆனால், விசாரணை நீதிமன்றத்தின் நடவடிக்கைகளுக்கு உடனடி இடைக்கால தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், இந்த மனு மீதான அடுத்தகட்ட விசாரணையை வரும் 18ம் தேதி திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது. உயர் நீதிமன்றம் தடை விதிக்காத காரணத்தால், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட சம்மன் உத்தரவின்படி, ராபர்ட் வதேரா இன்று டெல்லி ராவுஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது அவரது தரப்பில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் நிலுவை குறித்து எடுத்து கூறப்பட்டதால் மீண்டும் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: