தாம்பரம் மாநகராட்சி, 3வது மண்டலத்தில் பராமரிப்பின்றி குடிமகன்கள் கூடாரமான பூங்காக்கள்: உடைந்து கிடக்கும் விளையாட்டு உபகரணங்கள்

 

* மின் விளக்குகள் பழுதால் குற்றங்கள் அதிகரிப்பு

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி, 3வது மண்டலம், செம்பாக்கம் பகுதியில் பூங்காக்களை சீரமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், சமூக விரோதிகள் கூடாரமாக மாறியுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல், செம்பாக்கம் ஆகிய நகராட்சிகள் மற்றும் பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, மாடம்பாக்கம், சிட்லபாக்கம், திருநீர்மலை ஆகிய பேரூராட்சிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு தாம்பரம் மாநகராட்சியாக உருவாக்கப்பட்டது. இந்த மாநகராட்சியில் 5 மண்டலங்கள், 70 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இதில் தாம்பரம் மாநகராட்சி, 3வது மண்டலம், செம்பாக்கம் பகுதியில் உள்ள 41வது வார்டு, ராதேஷியாம் அவென்யூ பூங்கா, சரஸ்வதி நகர் பூங்கா, திருவள்ளுவர் பூங்கா, ஆளவட்டம்மன் கோயில் பூங்கா உள்ளிட்டவற்றில் எந்தவித பராமரிப்பும் இல்லாததால் சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்த நிலையிலும், பூங்கா முழுவதும் புதர்மண்டியும் காணப்படுகிறது. மேலும், பொதுமக்கள் அமர்ந்து ஓய்வெடுக்கும் இருக்கைகள் சேதமடைந்தும், மின்விளக்குகள் பழுதான நிலையிலும் உள்ளன. இதனால் பொதுமக்கள், சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள் இந்த பூங்காக்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பூங்காக்களை முறையாக பராமரிக்க மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு நடவடிக்கைகளும் அவர்கள் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக 3வது மண்டல அலுவலகத்தில் மண்டல குழு தலைவர் இல்லாததால் எந்த பணிகளும் முறையாக நடைபெறுவதில்லை எனவும் புகார் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘ராதேஷியாம் அவென்யூ பூங்காவிற்கு அப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும், சிறுவர், சிறுமிகள் மற்றும் இளைஞர்கள் விளையாடுவதற்கும், மாலை நேரத்தில் பொழுது போக்கவும் வந்து செல்வது வழக்கம்.

ஆனால் 3வது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பூங்காக்களை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால் புதர்மண்டி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் உடைந்து கிடக்கின்றன. இதனால், சிறுவர்கள் அவற்றை பயன்படுத்த முடியவில்லை. செம்பாக்கம் நகராட்சியாக இருந்தபோது தினமும் பூங்கா வளாகத்தை சுத்தம் செய்வது, செடிகளை முறையாக பராமரிப்பது, புதர்களை அகற்றுவது, விளையாட்டு உபகரணங்களை பராமரிப்பது போன்ற பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் தினமும் பூங்காக்களுக்கு ஆர்வமுடன் வந்து சென்று கொண்டிருந்தனர்.

காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமானோர் இங்குள்ள பூங்காக்களில் நடைபயிற்சி மேற்கொள்ள பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது 3வது மண்டலத்துக்குட்பட்ட ராதேஷியாம் அவென்யூ பூங்கா, சரஸ்வதி நகர் பூங்கா உள்ளிட்ட எந்த பூங்காக்களும் பராமரிக்கப்படவில்லை. பூங்காக்கள் பராமரிக்கப்படாமல் உள்ளதால் பொதுமக்கள், சிறுவர்கள் என யாரும் பூங்காக்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. செடிகள் அதிக அளவில் வளர்ந்து புதர் போல் காட்சியளிப்பதால், பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா சீரமைப்பு பணி, ரூ.46 லட்சம் மதிப்பீட்டில் உடற்பயிற்சி கூடம், ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ஷட்டில் கோட் என மொத்தம் ரூ.75 லட்சத்திற்கு பணிகள் நடைபெற தொடங்கியது.

ஆனால் தரமற்ற விளையாட்டு உபகரணங்கள், இருக்கைகள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் நடைப்பயிற்சி செய்யும் பாதையில் பேட்ச் ஒர்க் மட்டும் செய்யப்பட்டு, பெயரளவில் பூங்கா சுற்றுச்சுவர்களுக்கு வண்ணம் அடித்து பணிகள் நடந்தது போல் காட்டிவிட்டு, ஷட்டில் கோட் மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைத்து பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது. மேலும் ராதேஷியாம் அவென்யூ பூங்காவிற்கு, ராதேஷியாம் அவென்யூ, டெல்லஸ் அவென்யூ, பேஸ்- 2 பூங்கா என தவறுதலாக பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும் பூங்காவின் ஒருபுறம் திறந்தவெளி கழிப்பிடம் அமைக்கப்பட்டு இருப்பதோடு, எந்நேரமும் பூங்கா திறந்த நிலையில் இருப்பதால் மாலை 7 மணிக்கு மேல் காதல் ஜோடிகளும், இரவு நேரத்தில் குடிமகன்களும் பூங்காக்களை அவர்களது தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்கின்றனர்.

எனவே மீண்டும் பொதுமக்கள், மற்றும் சிறுவர்கள் பயன்பெறும் வகையில் 3வது மண்டலத்தில் உள்ள பூங்காக்கள் அனைத்திலும் புதிய மின் விளக்குகள் அமைத்து, பூங்காக்களை முழுமையாக சீரமைத்து தர வேண்டும் எனவும் புதிதாக கட்டப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தில் தேவையான அனைத்து உபகரணங்களையும் அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க வேண்டும் எனவும், ஆளவட்டம்மன் கோயில் குளத்தை தூர்வாரி ஆழப்படுத்தி சீரமைப்பதோடு அங்குள்ள பூங்காவையும் முழுமையாக சுத்தம் செய்து சீரமைத்து, அங்குள்ள பாம்புகள் போன்ற விஷ பூச்சிகளை முழுமையாக அகற்றி பொதுமக்கள் பயன்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செம்பாக்கம் பகுதியில் உள்ள அனைத்து பூங்காக்களையும் பராமரிப்பதற்கு என தனித்தனியாக ஆட்கள் அமைத்து தினமும் முறையாக பராமரிப்பதற்கும் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Related Stories: