இடைப்பாடி, மே 14: இடைப்பாடி அருகே பக்கநாடு ஊராட்சி ஆணைபள்ளம் பகுதியில் நேற்று அதிகாலை மர்ம விலங்குகள் கடித்து 14 ஆடுகள் பலியானது.
இடைப்பாடி ஒன்றியம், பக்கநாடு ஊராட்சி ஆணைபள்ளம் முகரை பகுதியை சேர்ந்தவர் மாதையன் மனைவி பழனியம்மாள். இவர் ஆடுகளை வளர்த்து வந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை செம்மறி ஆடுகளுக்கு வழக்கம்போல் சோளத்தட்டை போட சென்றபோது 11 ஆடுகள் மர்ம விலங்கு கடித்து இறந்து கிடந்தது. இதேபோல், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு மாதையன் வீட்டில் 2 ஆடுகளும், பொன்னுசாமி என்பவரது வீட்டில் ஒரு ஆடுகள் என மொத்தம் 14 ஆடுகள் நேற்று அதிகாலை கடிபட்டு இறந்துகிடந்தது. இதுகுறித்து தகவலறிந்த கால்நடை மருத்துவர் கண்ணன், விஏஓ சிவகுமார் ஆகியோர் சென்று பார்வையிட்டு கடிபட்டு கிடந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனர். ஆடுகளை கடித்து குதறிய மர்ம விலங்கு குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
