சேலம், மே 12: சேலம் சத்திரம் மார்க்கெட்டிற்கு பண்ருட்டி பலாப்பழம் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், ஒரு கிலோ ரூ.25 ஆக விலை சரிந்துள்ளது.
சேலம் சத்திரம் மார்க்கெட்டிற்கு பண்ருட்டியில் இருந்து பலாப்பழம் வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது. இங்குள்ள மண்டிகளுக்கு தினமும் 100 டன் அளவிற்கு பண்ருட்டி மற்றும் புதுக்கோட்டை பலா விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த மார்க்கெட்டில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள், பலாப்பழங்களை டன் கணக்கில் வாங்கிச் செல்கின்றனர். கடந்த வாரத்தில் ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டது. நேற்று கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை குறைந்தது. இதனால், வியாபாரிகள் பலரும் ஆர்வமுடன் பலாப்பழங்களை வாங்கிச் செல்கின்றனர். சேலம் மாநகர பகுதியில் சாலையோரம் பல்வேறு இடங்களில் சில்லரை விற்பனையாக பலாப்பழம் விற்கப்படுகிறது. வரும் நாட்களில் பண்ருட்டி பலா வரத்து இன்னும் அதிகரிக்கும். அப்போது விலை மேலும் குறையும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
