இடைப்பாடி, மே 12: இடைப்பாடி அருகே முலாம்பழம் விளைச்சல் அதிகரித்தும், விலை குறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இடைப்பாடியை சுற்றியுள்ள பூலாம்பட்டி, வெள்ளைக்கவுண்டனூர், பாசக்குட்டை, பில்லுக்குறிச்சி, வட்ராம்பாளையம், காவேரிபட்டி, ஒக்கிலிப்பட்டி, பொன்னம்பாளையம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் 110 ஏக்கர் பரப்பளவில் முலாம்பழம் சாகுபடி செய்துள்ளனர். இங்கு விளையும் முலாம்பழம் இடைப்பாடி, கொங்கணாபுரம், சேலம், ஈரோடு, தர்மபுரி, கோவை ஆகிய பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. மேலும் நடப்பாண்டில் முலாம்பழம் விளைச்சல் அதிகரித்ததால் கிலோ ரூ.30க்கு விற்பனையானது. தற்போது, மழையால் விளைச்சல் அதிகரித்த நிலையில், கிலோ ரூ.10 முதல் 15 வரை விற்பனையாவதால் விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், `கோடை வெயிலை நம்பி முலாம்பழம் அதிக அளவில் சாகுபடி செய்தோம். ஆனால் விளைச்சல் அதிகரித்தும் விலை குறைவால் முதலீடு மற்றும் பராமரிப்பு செலவை கூட எடுக்க முடியவில்லை. அதனால் அரசு விலை நிர்ணயம் செய்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருகும்,’ என்றனர்.
