உடுமலை, மே 13: கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தின் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டத்தின்கீழ் உடுமலை அருகே உள்ள கரட்டுபதி பழங்குடியினர் கிராமத்தில் பயிற்சி முகாம் நடந்தது. ஆனைமலை புலிகள் காப்பாக வனவர் செந்தில்முருகன் வரவேற்றார். வனச்சரகர் புகழேந்தி சிறப்புரையாற்றினார். ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு எதிராக உறுதிமொழி எடுக்கப்பட்டது. கரட்டுபதி கிராம தலைவர் கருப்பசாமி, திப்பிப்பாறை கிராம தலைவர் வெள்ளையம்மாள் ஆகியோர் பேசினர்.
கரும்பு இனப்பெருக்க நிறுவன முதன்மை விஞ்ஞானி புத்திர பிரதாப் தலைமை வகித்து பேசினார். கரட்டுபதி மற்றும் திப்பிப்பாறை கிராமங்களை சேர்ந்த 120 பேருக்கு 17 வகையான உபகரணங்கள் வழங்கப்பட்டன. பழங்குடியினரின் ஆரோக்கிய வாழ்க்கை வழிமுறைகள் குறித்து டாக்டர் ஹரிஈஸ்வரன், சிறுதானிய பொருட்கள் தயாரிப்பு குறித்து வேளாண் பல்கலை. பேராசிரியர் சரஸ்வதி ஈஸ்வரன், சிப்பிக்காளான் வளர்ப்பு குறித்து முதுநிலை விஞ்ஞானி கோபி ஆகியோர் பேசினர். முடிவில் முதன்மை விஞ்ஞானி மோகன்ராஜ் நன்றி கூறினார்.
