நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரிக்கை

திருப்பூர்,மே13: தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் (சைமா) சார்பில் திருப்பூரில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், சங்கத்தின் தலைவர் சண்முகசுந்தரம், பொதுச்செயலாளர் தாமோதரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் ஜோசப் விஜய்கும், திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு எம்எல்ஏக்களுக்கும் சைமா சங்கத்தின் சார்பில் மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவிப்பதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து, பின்னலாடைத் தொழிலின் தற்போதைய சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. தற்போது நிலவி வரும் அபரிமிதமான நூல் விலை உயர்வு காரணமாக பின்னலாடை தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தீர்மானம் இயற்றப்பட்டது.

மேலும், பருத்தி மீதான 11% இறக்குமதி வரியை உடனடியாக நீக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வரி நீக்கம் ஒன்றே மூலப்பொருள் தட்டுப்பாட்டைப் போக்கி, பின்னலாடை தொழிலை பாதுகாக்க உதவும் என செயற்குழுவில் வலியுறுத்தப்பட்டது.

 

Related Stories: