உடுமலை, மே 14: உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் சார்பில், ஒப்பந்த அடிப்படையில் மீன் பிடிக்கும் பணி மீனவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. மொத்தம் 17 பரிசல்களில் தலா இருவர் வீதம் அணையில் தினசரி காலை, மாலை நேரங்களில் வலைவிரித்து மீன்பிடித்து வருகின்றனர். இவர்கள் பிடித்துவரும் மீன்களுக்கு கிலோவுக்கு குறிப்பிட்ட தொகை மீன் வளர்ச்சி கழகம் சார்பில் வழங்கப்பட்டு
வந்தது.
அமராவதி அணையில் கட்லா, ரோகு, மிருகால், ஜிலேபி ஆகிய 4 வகை மீன்கள் கிடைக்கின்றன. இந்த மீன்கள் அமராவதியில் உள்ள மீன் வளர்ச்சி கழக ஸ்டால் மட்டுமின்றி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள மீன் வளர்ச்சி கழக ஸ்டால்களிலும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில், மீன் பிடி உரிமை முற்றிலும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இனி, மீனவர்களுக்கு கூலி மற்றும் விற்பனை அனைத்தையும் தனியார் நிறுவனமே மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
