மொடக்குறிச்சி, மே 13: மொடக்குறிச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடு போன சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மொடக்குறிச்சி அடுத்த குளூர் காலனியை பாப்பா (எ) பாப்பாள் (50) இவரது கணவர் ராஜன். கடந்த சில ஆண்டுக்கு முன்பே இறந்து விட்டார். இவரது மகன் பொன்னுசாமி திருமணமாகி வெள்ளோட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
கூலி வேலைக்கு சென்று வரும் பாப்பாள் நேற்று காலை தனது உறவினரை பார்க்க ஈரோடு சென்றுள்ளார். பின்னர் மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் பீரோவில் அருகில் வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து திறந்து அதில் இருந்து இரண்டரை பவுன் மற்றும் பணம் 20 ஆயிரம் கொள்ளை போனது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் மொடக்குறிச்சி போலீசார் பணம் நகை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
