சேலம்: சேலம் மாவட்டம் மேச்சேரி மலையனூரை சேர்ந்தவர் சிவா (31). இவர் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் 15 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். தற்போது 17 வயதாகும் அச்சிறுமிக்கு பெண் குழந்தை உள்ளது. கடந்த 30ம் தேதி, அச்சிறுமி தனது கைக்குழந்தையுடன் வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில், மீண்டும் திரும்பி வரவில்லை. இதுபற்றி மேச்சேரி போலீசில் கணவர் சிவா கொடுத்த புகாரின் பேரில், இளம்பெண் மாயம் என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தனர்.
அதில், கைக்குழந்தையுடன் மாயமான 17 வயது சிறுமி, ஏற்கனவே சேலம் இளம்பிள்ளை அருகே மாட்டையாம்பட்டியை சேர்ந்த தறிப்பட்டறை வைத்திருக்கும் சுப்பிரமணி (32) என்பவரை இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து வந்துள்ளார். சிவாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன் இருவரும் ஓட்டம் பிடித்ததும், பிறகு பெற்றோர் அழைத்து வந்து, சிவாவிற்கு திருமணம் செய்து வைத்ததும் தெரியவந்தது.
இதனால், சுப்பிரமணி மீது போலீசார் சந்தேகம் கொண்டு விசாரித்தபோது, அவர் தான் 17 வயது சிறுமியை கைக்குழந்தையுடன் கடத்திச் சென்று 2வது திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம், இருவரையும் மேச்சேரி போலீசார் மீட்டு வந்து பெற்றோர் முன்னிலையில் பேசியுள்ளனர். அப்போது தனக்கு 18 வயது கடந்துவிட்டது எனக்கூறி, தான் சுப்பிரமணியுடன் தான் வாழ்வேன் எனக்கூறிவிட்டு அப்பெண் சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு முதல் கணவர் சிவா உள்ளிட்ட 5 பேர் கும்பல், மாட்டையாம்பட்டியில் உள்ள சுப்பிரமணியின் வீட்டிற்கு வந்துள்ளனர். அங்கு வீட்டு வாசலில் போர்ட்டிகோவில் கட்டிலில் படுத்திருந்தவரை கத்தியால் வெட்டியுள்ளனர். கை, கால்களில் வெட்டு விழுந்தநிலையில், அந்த நபர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
அப்போது அவர், சுப்பிரமணியில்லை என்பதும், பக்கத்து வீட்டில் வசிக்கும் தறித்தொழிலாளி இருசா கவுண்டர் (42) என்பதும் தெரியவந்தது. உடனே 5 பேர் கும்பல் தப்பிச் சென்றனர்.
அலறல் சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்து சுப்பிரமணியும், பக்கத்து வீட்டில் இருந்து இருசா கவுண்டரின் உறவினர்களும் ஓடி வந்து அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த மகுடஞ்சாவடி போலீசார் நடத்திய விசாரணையில், இன்ஸ்டாகிராம் காதலியை கடத்தி வந்து 2வது திருமணம் செய்த சுப்பிரமணிக்கு பதில் ஆள் மாறி பக்கத்து வீட்டை சேர்ந்த தறித்தொழிலாளி இருசா கவுண்டரை முதல் கணவர் சிவா உள்ளிட்டோர் வெட்டியது தெரியவந்தது.
இதையடுத்து கொலை முயற்சி வழக்குப்பதிந்து, முதல் கணவர் சிவா (31), அவரது தம்பி குமார் (28), நண்பர்கள் வசந்தகுமார் (28), சக்திவேல் (26) ஆகிய 4 பேரை கைது செய்தனர். தலைமறைவான மற்றொரு வாலிபரை தேடி வருகின்றனர்.
