தாத்தா, பாட்டியை வெட்டி கொன்று டீசல் ஊற்றி எரித்த இன்ஜினியர்: கஞ்சா போதையில் வெறிச்செயல்

மன்னார்குடி: மன்னார்குடி அருகே தாத்தா, பாட்டியை கொன்று டீசல் ஊற்றி எரித்த இன்ஜினீயரை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த காரக்கோட்டை புதுத்தெருவை சேர்ந்தவர் பிச்சைமுத்து(72). இவரது மனைவி சந்திரா(66). இவர்களது மகன் கலியபெருமாள்(55). இவரது மனைவி தேவி(50). இவர்களுக்கு ஐயப்பன்(30) என்ற மகன் உள்ளார். பொறியியல் பட்டதாரியான இவர் மது, கஞ்சா போதைக்கு அடிமையானவர். திருச்சி, புதுச்சேரியில் உள்ள போதை மறுவாழ்வு மையங்களில் தங்கி சிகிச்சை பெற்றுள்ளார். அதேபோல் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றார். ஆனாலும் மது, கஞ்சா பழக்கத்தை நிறுத்தவில்லை.

தம்பதிக்குள் ஏற்பட்ட தகராறால் கலியபெருமாள், தேவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அதே பகுதியில் உள்ள இந்திரா நகரில் தாய் தேவியுடன் மகன் ஐயப்பன் வசித்து வருகிறார். மலேசியாவில் பல ஆண்டுகளாக கலியபெருமாள் வேலை பார்த்து வருகிறார். தந்தை கலியபெருமாளிடம் ஐயப்பன் தொடர்பில் இருந்து வந்தார். செல்போனில் அடிக்கடி பேசுவதுடன் தனக்கு தேவைப்பட்டபோது தந்தையிடம் பணம் கேட்டு வாங்கிக்கொள்வார்.

போதைக்கு அடிமையான ஐயப்பனுக்கு சமீபகாலமாக பணம் அனுப்புவதை தந்தை கலியபெருமாள் நிறுத்தி விட்டார். இதனால் தந்தை மீது ஆத்திரத்தில் இருந்து வந்த ஐயப்பன் தனது தாத்தா, பாட்டியான பிச்சைமுத்து, சந்திரா வீட்டுக்கு சென்று தந்தை கலியபெருமாள் எனது அம்மாவையும் பிரிந்து சென்று விட்டார். எனக்கும் பணம் அனுப்புவதில்லை. செல்போனில் தொடர்பு கொண்டாலும் எடுப்பதில்லை என்று கூறி தகராறு செய்து வந்தார். நேற்றிரவு வீட்டில் பிச்சைமுத்து, சந்திரா இருந்தனர். அப்போது மது மற்றும் கஞ்சா போதையில் சென்ற ஐயப்பன் தாத்தா, பாட்டியுடன் தகராறு செய்தார். பின்னர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து 2 பேரையும் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் 2 பேரும் அதே இடத்தில் இறந்தனர். பின்னர் அருகில் உள்ள பெட்ரோல் பங்க்குக்கு சென்று டீசல் வாங்கி வந்து பிச்சைமுத்து, சந்திரா உடலில் தெளித்து தீ வைத்தார். இதையடுத்து தனது வீட்டுக்கு சென்று நடந்த சம்பவத்தை தாய் தேவியிடம், ஐயப்பன் கூறினார்.

இந்த தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் பாதி எரிந்த நிலையில் இருந்த 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து ஐயப்பனை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். மேலும் ஐயப்பனின் தாய் தேவியிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: