ஜம்மு: பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஜம்மு-காஷ்மீர் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். ஜம்மு-காஷ்மீரின் கிஷ்வார் பகுதியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் மஷ்கூர் மாஸ்டர். இவர், இந்தர்வால் மண்டலத்தில் உள்ள குஜ்ராரி தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். 2004ம் ஆண்டில் ரெஹ்பர்-இ-தாலீம் ஆசிரியராக நியமிக்கப்பட்டு, 2009ம் ஆண்டில் பணி நிரந்தரம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், சத்ரூ பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத குழுவை சேர்ந்த பாகிஸ்தானிய பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும், அவர்களுக்கு தேவையான தளவாடங்களை வழங்கியதாகவும மஷ்கூர் மாஸ்டர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பேரில், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ், ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து கிஷ்வார் போலீசார் விசாரணை நடத்தி ஆசிரியரை கைது செய்ததாக தெரியவந்துள்ளது. யுஏபிஏ.வின் 13, 16, 18 மற்றும் 20 ஆகிய பிரிவுகள், பிஎன்எஸ் 61(2), 109, 147 மற்றும் 148 ஆகிய பிரிவுகள் மற்றும் ஆயுத சட்டத்தின் 7/27 ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அந்த ஆசிரியரை பணியில் இருந்து நிரந்தரமாக நீக்க ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உத்தரவிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
