×

புதிதாக தேர்வாகியுள்ள சபாநாயகர் நடுநிலையோடு தராசு முள் போல் செயல்பட வேண்டும்: எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்

சென்னை: புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் சட்டசபை கூட்டத்தில் சபாநாயகர் பதவிக்கு சென்னை ஆயிரம்விளக்கு தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி. பிரபாகர், துணை சபாநாயகர் பதவிக்கு ரவிசங்கர் ஆகிய இருவரும் போட்டியின்றி தேர்வாகினர். சபாநாயகர் தேர்வை தொடர்ந்து நடைபெற்ற வாழ்த்துரைகளின் போது ஆளும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் புதிய சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): சட்டபேரவை தலைவர், துணை தலைவராக தேர்ந்தெடுக்கபட்டுள்ளவர்களுக்கு வாழ்த்துகள். நடுநிலையோடு தராசு முள் போல் செயல்பட வேண்டும். எதிர்க்கட்சியின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஆளுங்கட்சிக்கு நல்லது. சபாநாயகர் ஜேசிடி.பிரபாகர் பழகுவதற்கு இனிமையானவர், நடுநிலையோடு செயல்பட வேண்டும். முன்னாள் சபாநாயகர் தனபால் வரிசையில் நீங்களும் வர வேண்டும். நேற்று தற்காலிக சபாநாயகர் பணி சிறப்பாக இருந்தது. மது கடைகளை மூடும் முதலமைச்சர் உத்தரவுக்கு பாராட்டு.

எஸ்.பி.வேலுமணி (அதிமுக): எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் பேரன்பை பெற்ற ஜே.சி.டி.பிரபாகர் முன்னாள் சபாநாயகர்கள் வரிசையில் இடம்பெறும் வகையில் சிறப்பாக பணியாற்ற பாராட்டு. தொடர்ந்து, தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு அருகிலுள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பித்த தமிழக முதல்வர் விஜய்க்கு வாழ்த்து.

ராஜேஷ்குமார் (காங்கிரஸ்): அரசியல் அனுபவம், அமைதியான அணுகுமுறை, அனைத்து தரப்பினரையும் அரவணைக்கும் ஜனநாயகப் பண்பு கொண்டவர். உயரிய பொறுப்புகள் தங்களின் தோள்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அடிப்படை கொள்கைகளுக்கு மரியாதை அளிக்கும் வகையில் தங்களின் செயல்பாடுகள் அமையும் என நம்புகிறோம். ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் சமநீதியுடன் நீங்கள் செயல்படுவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

எஸ்.காமராஜ் (அமமுக): இளைஞர்கள் அதிகளவில் சட்டமன்றத்தில் இடம் பெற்றுள்ளனர். முதலமைச்சர் நல்ல இளைஞராக இருக்கும் காரணத்தினால் சிறந்த ஆட்சி ஏற்படுத்தித் தருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அன்றைக்கு இருந்த அரசியல் சூழலால் சில கசப்பான சூழல் இருந்தது. இன்றைக்கு முதலமைச்சர் அவரால் தான் நல்லாட்சியை தர முடியும். நிச்சயமாக நீங்கள் நல்லாட்சி தர வேண்டும். நீங்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இளைஞர்களை போல நாங்களும் உங்களை நம்புகிறோம்.

செல்லசுவாமி (மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): அரசியல் அனுபவமும், அனைவரையும் அரவணைத்து ஜனநாயகப் பண்புமிக்க உயரிய பொறுப்பை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஜனநாயக முறைப்படி தொடர்ந்து செயல்பட வேண்டும். கட்சி வேறுபாடின்றி தாங்கள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள். தமிழகத்தில் மத சார்பற்ற ஆட்சியாக உங்களின் செயல்பாடு அமையும் என பாராட்டுகிறேன். அனைவரையும் பாகுபாடின்றி வழிநடத்தி செல்ல வேண்டும்.

வன்னியரசு (விசிக): 17வது சட்டப்பேரவையில் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜேசிடி பிரபாகர் மற்றும் துணைத்தலைவர் ரவிசங்கருக்கும் விசிக சார்பிலும், திருமாவளவன் சார்பிலும் வாழ்த்துகள். பெரும்பான்மை வாதத்தை விட சிறுபான்மை மக்களின் குரல் வலிமை பெற வேண்டும் என அம்பேத்கர் கூறியிருக்கிறார். ஆளுங்கட்சியின் குரலை விட எதிர்கட்சிகளின் குரல் வலிமை பெற வேண்டும். அதில் இருக்கும் நியாயங்களை புரிந்து இந்த அவை நடக்க வேண்டும்.

ராமச்சந்திரன் (கம்யூனிஸ்ட்): பேரவைத் தலைவருக்கும், துணைத்தலைவருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாழ்த்துகள் பாராட்டுகள். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பாராமல் சபாநாயகர் நடுநிலையோடு செயல்பட வேண்டும். ஆளுங்கட்சியை விட எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அதிகளவு நேரம் கொடுக்க வேண்டும்.

தமிமுன் அன்சாரி: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சபாநாயகருக்கு வாழ்த்துகள். சட்டமன்றத்தில் எண்ணிக்கையின் முக்கியத்தும் விட எண்ணம் மிக முக்கியம்.

போஜராஜன் (பாஜ): தேர்ந்தெடுக்கப்பட்ட சபாநாயகருக்கு வாழ்த்துகள். நல்லதொரு ஆட்சி அமைய பிரதமர் தலைமையில் ஒரு இணக்கமான மாநில அரசாக பயணிப்போம். உதகை குளிர்ச்சித் தன்மை இருப்பது போன்று அவையில் காரசார விவாதங்கள் இருந்தாலும் இந்த அவை குளிர்ச்சி தன்மையுடன் இருக்க வேண்டும்.

சவுமியா அன்புமணி (பாமக): ஜனநாயக முறைப்படி நேர்மையாக சட்டமன்றம் நடக்கும் என்பது ஐயமில்லை. இதனை பாக்கியமாகவும் கருதுகிறோம். ஆரோக்கியமான விவாதங்கள் நேர்மையாக நடந்த தமிழக சட்டசபையில் எங்களுக்கு அதிக நேரம் வழங்க வேண்டும். எங்களுக்கு வாய்ப்பளித்த ராமதாஸ், அன்புமணிக்கு நன்றி. சமூகநீதி, போதை ஒழிப்பு, வேளாண், கல்வி, மருத்துவம், பெண்களுக்கு பாதுகாப்பு, தமிழுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.

பிரேமலதா (தேமுதிக): சுற்றி இருக்கும் புகைப்படங்களே உண்மைக்கு சாட்சி. நடுநிலையோடு தராசு போல் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் செயல்பட வேண்டும். இனிமேல் தமிழ்நாட்டில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்க வேண்டும் என கோரிக்கை.

* தமிழ் மொழிக்கே அவையில் முதலிடம்
சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் உரை: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழி வந்தவன் நான். முதலமைச்சர் விஜய்யை தமிழக மக்கள் இன்னொரு எம்.ஜி.ஆராக பார்க்கிறார்கள். தேர்தலில் அலை வந்தது, அது விஜய் அலை, வெற்றி அலை, விசில் அலை. எவ்வளவோ பிரச்னைகள் வந்த போதும் ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதிப் புரட்சியை ஏற்படுத்தி விட்டார் விஜய். சாதி, மதம், இனம் பார்க்காமல், பணம் பெறாமல் மக்கள் தவெகவுக்கு வாக்களித்துள்ளனர். போதையில்லா தமிழ்நாட்டை முன்னெடுக்க வேண்டும் என்று விஜய் உத்தரவிட்டுள்ளார்.

அவையின் உண்மையான எஜமானர்கள் மக்கள் தான். தமிழ் மொழி வெறும் அடையாளம் அல்ல. தமிழ் மொழிக்கே அவையில் முதலிடம். அனைவர் நலனும் இந்த அவையின் சிந்தையாக இருக்க வேண்டும். கட்சி சார்பின்றி நான் செயல்படுவேன். அனைவருக்கும் சம வாய்ப்பு அளிப்பேன். தரமான விவாதங்கள் நடக்கும். அவையின் மாண்புகளை காப்போம். தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்ப்போம். அரசியல் மோதல்களுக்காக மக்கள் நம்மை அவைக்கு அனுப்பவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

Tags : Chennai ,Chennai Thousand Lights ,Thaveka ,MLA ,J.C.D. ,Prabhakar ,Ravi Shankar ,
× RELATED என்டிஏ தலைமை இயக்குநர் தகவல் அடுத்த...