திருவனந்தபுரம்: கேரளாவில் சட்டப்பேரவை தேர்தல் முடிவு வந்து 10 நாட்களுக்குப் பின் முதல்வர் யார் என்பது குறித்து இன்று அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேரளத்தில் சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்ற பின்னரும் இதுவரை முதல்வர் யார் என்பதை தீர்மானிக்க முடியாத குழப்ப நிலை நீடித்து வருகிறது. முதல்வர் பதவிக்கு கே.சி. வேணுகோபால், சதீசன் மற்றும் ரமேஷ் சென்னித்தலா ஆகிய 3 பேரும் மல்லுக்கட்டுவது தான் இதற்கு காரணமாகும்.
யாரும் யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் இருந்து வருவதால் காங்கிரஸ் தலைமையால் இதுவரை முதல்வர் யார் என்பதை அறிவிக்க முடியவில்லை. கடந்த 4ம் தேதி தேர்தல் முடிவு வந்த மறுநாளே முதல்வர் குறித்து தீர்மானிப்பதற்காக டெல்லியில் இருந்து காங்கிரஸ் மேலிடக்குழுவைச் சேர்ந்த 2 பேர் திருவனந்தபுரம் வந்தனர். இக்குழு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள், முக்கிய தலைவர்கள் மற்றும் முதல்வர் பதவிக்கு போட்டியிடும் 3 பேரிடமும் ஆலோசனை நடத்தியது.
ஆனால் இதில் எந்த முடிவையும் எடுக்க முடியாததால் மேலிடக்குழு டெல்லி திரும்பியது. இதைத்தொடர்ந்து வேணுகோபால், சதீசன் , ரமேஷ் சென்னித்தலா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் சன்னி ஜோசப் ஆகியோரை காங்கிரஸ் தலைமை டெல்லிக்கு வரவழைத்தது. இவர்களுடன் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இந்த பேச்சுவார்த்தையாலும் எந்த பலனும் ஏற்படவில்லை.
மூன்று பேருமே முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்காமல் முரண்டு பிடித்ததால் காங்கிரஸ் தேசிய தலைமையால் எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து கேரள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்களான கே. சுதாகரன், முரளீதரன், சுதீரன், திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன், விஷ்ணுநாத், ஷாபி பரம்பில் ஆகியோர் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டனர். இவர்களுடன் நேற்று ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
யாரை முதல்வராக தேர்வு செய்யலாம் என்பது குறித்து நீண்ட நேரம் இவர்களுடன் தேசிய தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரிடமும் இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்நிலையில் முதல்வர் பதவிக்கு ஒருவரை காங்கிரஸ் தலைமை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
