×

தண்ணீர் தேக்கி வைக்கும் வகையில் கரிக்கிலி பறவைகள் சரணாலய ஏரியை தூர் வாரி மேம்படுத்த வேண்டும்: இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தல்

 

மதுராந்தகம்: கரிக்கிலி பறவைகள் சரணாலய ஏரியை தூர் வாரி தண்ணீர் தேக்கி வைத்து மேம்படுத்த வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அருகில் கரிக்கிலி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயம் 1998ல் அந்த கிராமத்தில் உள்ள இரண்டு ஏரிகளால் உருவாக்கப்பட்டது. அன்றிலிருந்து இந்த ஏரிகளை வனத்துறை பாதுகாத்து பராமரித்து வருகிறது. இந்தநிலையில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பருவ மழை பெய்து ஏரி நிரம்பியதும் கூழைக்கடா, வர்ண நாரை, நத்தை குத்தி நாரை, பாம்பு தாரா, ஊசிவாள் வாத்து, நீலச்சிறகி, சாதா உள்ளன், நீர் காகம் உள்ளிட்ட பறவைகள் இங்கு ஆண்டுதோறும் நவம்பர் மாதம் அங்கு உள்ள மரங்களில் தங்கி முட்டையிட்டு குஞ்சு பொரித்து தங்களது குஞ்சு பறவைகளுடன் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் சென்று விடும்.

ஆனால் சுமார் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஏரியில் விரைவாக தண்ணீர் வற்றி விடுவதாலும், பறவைகளுக்கு போதிய உணவு கிடைக்காத காரணத்தினாலும், கிராமவாசிகளின் நடமாட்டம் அந்த ஏரிக்குள் அதிகமாக இருந்த காரணத்தினாலும் அங்கு கூழைக்கடா, நத்தை கொத்தி நாரை, வர்ணனாரை உள்ளிட்ட பறவைகள் வராமல் போனதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது வனத்துறை அந்த ஏரியில் பறவைகளை காண இரும்பினால் உயர் கோபுரம், சுற்றுலாப் பயணிகள் அமர இருக்கைகள், குடிநீர் வசதி, நடைபாதை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை செய்துள்ளது.

இருப்பினும் இந்த ஏரியை தூர்வாரி ஆழப்படுத்தி தண்ணீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மீன்குஞ்சுகளை அதிக அளவில் விட்டு பறவைகளின் உணவு தேவையையும் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இங்கு உள்ள மரங்களில் பறவைகள் தங்கி முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் என்று இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

சுற்றுலா பயணிகளை கவர…
கரிக்கிலி பறவைகள் சரணாலைய ஏரிக்கரையில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் வனத்துறை பறவைகள் வடிவில் குழாய்கள், பறவைகள் பற்றிய தகவல் பலகைகள் இருக்கைகள், பறவைகளின் படங்கள் உள்ளிட்டவற்றை அமைத்துள்ளது.

அடர்த்தியான மரங்கள்
கரிக்கிலி பறவைகள் சரணாலயம் இயற்கை அழகுடன் ஏரியின் கரைகளின் மரங்கள் அடர்த்தியாக வளர்ந்து வனக்குகை போன்று அமைந்துள்ளது. இதனால் அங்கு வெயிலே தெரியாமல் ஜில்லென காணப்படுகிறது. இதனால் இயற்கையை விரும்பும் சுற்றுலா பயணிகளுக்கு இந்த இடம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

Tags : Curry birds ,Maduranthakam ,Karikili Birds Sanctuary Lake ,Far Wari ,Karikilli Bird Sanctuary ,Vedandangal Bird Sanctuary ,Chengalpattu District ,
× RELATED நீட் தேர்வு ரத்து; நீதித்துறையின்...