- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம்
- சென்னை
- ஜனாதிபதி
- மதுக்கூர் ராமலிங்கம்
- பொதுச்செயலர்
- கலாபிரான்
- ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல்
- முதல் அமைச்சர்
- ஜோசப் விஜய்
சென்னை: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம், பொதுச்செயலாளர் களப்பிரன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: முதல்வர் ஜோசப் விஜய்யின் சிறப்பு அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் என்னும் ஜோதிடரை நியமனம் செய்துள்ளது. இந்த நியமனத்தை உடனே திரும்பப்பெற வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது. தமிழக அரசின் இந்தச் செயல் அரசியல் சாசனத்திற்கு நேர் எதிரான நடவடிக்கை ஆகும்.
மக்களின் வரிப்பணத்தில் ஒரு ஜோதிடருக்கு ஊதியம் வழங்கி உயர் பொறுப்பு கொடுப்பது, அரசியல் சாசனத்தை கேலிக்குள்ளாக்கும் செயலாகும். முதல்வர் விஜய், ‘தனது அரசு ஒரு மதச்சார்பற்ற அரசாக செயல்படும்’ என்று உறுதியளித்தார். தனக்கு ஆதரவளித்த கூட்டணிக் கட்சிகளிடமும் அதே உறுதியைக் கொடுத்துள்ளார். அவரை நம்பி வாக்களித்த வாக்காளர்களும் அதையே விரும்புகிறார்கள். ஆனால் இந்த நடவடிக்கை அவருக்கு வாக்களித்த வாக்காளர்களிடமும், அவரை ஆதரித்த கூட்டணிக் கட்சிகளிடமும் பெரும் ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது.
முதல்வரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு மற்றும் நம்பிக்கைகள் அரசின் நிலைப்பாடுகள் மற்றும் செயல்பாடுகளில் ஒரு நாளும் வெளிப்படக்கூடாது என்றும் வலியுறுத்துகிறோம். ஆகவே இந்த நியமனத்தை அரசு உடனே ரத்து செய்ய வேண்டும் எனவும், அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் நோக்கில் மக்களிடையே செயல்பட்டு வரும் அமைப்புகளும் இந்த நியமனத்திற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்: நாடறிந்த பிரபல ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல், தமிழ்நாடு அரசின் முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டிப்பது வியப்பளிக்கிறது. மதச்சார்பின்மை பண்புகளை அடிப்படையாகக் கொண்ட அரசியலமைப்பு அதிகாரம் கொண்ட அரசு எந்த மதச்சார்பு அடையாளத்தையும் கொண்டிருக்கக் கூடாது.
அறிவியல் கண்ணோட்டமும், பகுத்தறிவு சிந்தனையும் வளர்த்து, வலிமைப்படுத்த வேண்டிய அரசு, முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர் ஒருவரை நியமித்திருப்பது சரியல்ல. இது பொதுமக்களிடம் தவறான நம்பிக்கைகளை ஊக்கப்படுத்துவதாவே அமையும். இதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு வீரபாண்டி யன் விடுத்த அறிக்கையில் கூறியுள்ளார்.
