- கங்கா நகர்
- திருச்சி எக்ஸ்பிரஸ்
- ராமேஸ்வரம்
- மானாமதுரை
- திருச்சிராப்பள்ளி ஹம்சபர் எக்ஸ்பிரஸ்
- ராஜஸ்தான்
- தமிழ்நாடு…
மானாமதுரை, மே 12: ராஜஸ்தான் மாநிலம் கங்காநகர் – திருச்சிராப்பள்ளி ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கங்காநகர் – திருச்சிராப்பள்ளி ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்:22497), ராஜஸ்தான் மாநிலத்தையும் தமிழ்நாட்டையும் இணைக்கும் நீண்ட தூர ரயில்களில் ஒன்றாகும். கடந்த 2024ஆம் ஆண்டு மேற்கு ரயில்வே நிர்வாகம் இதை அறிமுகம் செய்தது. ரயில்வே வாரியம் அகமதாபாத்- ராமேஸ்வரம் இடையே இந்த ரயிலை இயக்க ஒப்புதல் கொடுத்த நிலையில் ராமேஸ்வரம் ரயில் நிலைய விரிவாக்கம் மற்றும் பாம்பன் பாலப்பணிகளை காரணம் காட்டி தெற்கு ரயில்வே அந்த ரயிலை திருச்சியோடு நிறுத்தி விட்டது. அதன்பின் பாம்பன் பாலப்பணிகள் முடிந்து ஓராண்டுக்கு மேல் ரயில்கள் இயக்கம் நடந்து வரும் நிலையில், ராமேஸ்வரம் வரை நீட்டிக்காமல் திருச்சியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் கங்காநகரில் இருந்து வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் புறப்பட்டு புதன்கிழமை இரவு 10.30 மணிக்கு திருச்சிக்கு வந்து சேரும். மறுமார்க்கமாக வெள்ளிக்கிழமை அதிகாலை 4.45 மணிக்கு புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு 12.20 மணிக்கு கங்கா நகர் சென்றடையும். திருச்சியில் இருந்து சேலம், நாமக்கல், கர்நாடாக மாநிலம் ஹூப்ளி வழியாக மும்பை புறநகர் பகுதிகளான வசாய்ரோடு – கல்யாண்- சூரத்- ஆமதாபாத்- ஜோத்பூர் வழியாக கங்காநகர் சென்றடையும். இந்த ரயிலில் 17 ஏசி மூன்று அடுக்கு பெட்டிகள், பிரேக் வேன்கள் மற்றும் 1- பான்ட்ரி கார் உள்ளிட்ட பெட்டிகள் உள்ளன.
இந்த ரயிலில் ராமேஸ்வரம் வரும் வடமாநில பயணிகள், திருச்்சியில் இறங்கி திருச்சி ராமேஸ்வரம் பயணிகள் ரயிலில் வருகின்றனர். இந்த ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து ரயில் பயணிகள் சங்க நிர்வாகி செந்தில்குமார் கூறுகையில், அகமதாபாத் – ராமேஸ்வரம், இடையேதான் வாரம் ஒருநாள் இந்த ரயில் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. ஆனால் பாம்பன் பாலப்பணிகளை காரணம் காட்டி திருச்சியுடன் நிறுத்தப்பட்டது. திருச்சியில் இந்த ரயில் பெட்டிகள் 26 மணிநேரம் பனிமனையில் நிறுத்தி வைக்கப்படுகிறது. இப்போது ராமேஸ்வரம் வரை ரயில்கள் இயக்கபடுவதால் இந்த ரயிலை ராமேஸ்வரம் வரை ரயில் நீட்டித்தால் அகமதாபாத் – ராமேஸ்வரம் இடையே தினசரி ரயிலாக இயக்க மும்பை, மேற்கு ரயில்வே நிர்வாகம் தயாராக உள்ளதாக மும்பை மேற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். எனவே இந்த ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க தெற்கு ரயில்ேவ நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
