சென்னை: தமிழ்நாட்டின் 17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கூடியுள்ள நிலையில், நடைபெற்று முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற அனைவரும் சட்டமன்ற உறுப்பினர்களாக உறுதிமொழி ஏற்று வருகின்றனர். இந்த நிலையில் இதற்காக சட்டமன்றத்திற்கு இன்று காலை வருக தந்த அதிமுக உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு குழுவாகவும், எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஒரு குழுவாகவும் வருகை தந்தனர்.
கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுக மூத்த உறுப்பினர்கள் போர் கொடி தூக்கி இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அதிமுக எம்எல்ஏ-க்கள் இரு அணிகளாக பிரிந்து தனித்தனியே சட்டமன்றம் வந்தது அக்கட்சியில் ஏற்பட்டிருக்கும் பிளவை உறுதி செய்துள்ளது.
தவிர எடப்பாடி பழனிசாமி உறுதிமொழி ஏற்கும் போது ஒருசில அதிமுக உறுப்பினர்கள் மட்டுமே மேசையை தட்டி வரவேற்ற நிலையில், எஸ்.பி.வேலுமணி உறுதிமொழி ஏற்கும் போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் மேசையை தட்டி வரவேற்றனர். அதே போல அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு குழுவாகவும் எஸ்.பி. வேலுமணி தலைமையில் ஒரு குழுவாகவும் சட்டப்பேரவைக்கு வந்தனர். அதிமுக-வில் உட்கட்சி பூசல் நிலவியதாக தகவல்கள் வெளியான நிலையில் , அது சட்டப்பேரவையில் கண்கூடாக எதிரொலித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
