ஹார்மோஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை பாதுகாப்பதற்காக பிரான்ஸ் மற்றும் பிரிட்டனின் திட்டத்திற்கு ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்காசிய நாடான ஈரான் மீது இஸ்ரேல் – அமெரிக்கா இணைந்து கடந்த பிப்ரவரி இறுதியில் போரை துவக்கின. இப்போர் தீவிரமடைந்ததையடுத்து, உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய இடம் வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியது. இதனால், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததுடன், சர்வதேச நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு வழிவகுத்தது. இந்த சூழலில், கடந்த ஒரு வாரமாக பாரசீக வளைகுடாவில் கப்பல்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல்கள் நடந்து வருகின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை ஈரானின் துறைமுகங்கள் மீதான தனது முற்றுகையை மீற முயன்றதாக கூறி 2 ஈரானிய எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதுபோல ஈரானின் எண்ணெய் கப்பல்கள் அல்லது வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல் நடந்தால், அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் எதிரி நாட்டு கப்பல்கள் மீது கடுமையான பதிலடி தாக்குதல் நடத்தப்படும் என ஈரானின் புரட்சிகர காவல் கடற்படை எச்சரித்திருந்தது. இதனிடையே ஹார்மோஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை பாதுகாப்பதற்காக பிரான்ஸ் மற்றும் பிரிட்டனின் திட்டத்திற்கு ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சர்வதேச சட்டத்தை மீறும் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக அந்நிய கப்பல்கள் நுழைந்தால் ஈரானிய படைகள் உடனடியாக பதிலடி கொடுக்கும் அந்நாட்டு வெளியுறவுத்துறை துணை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்கு பதில் அளித்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான்; இது ஒரு ராணுவ நிலை நிறுத்தம் அல்ல என்றும் சூழல் தணிந்த பிறகு கப்பல் போக்குவரத்தை பாதுகாப்பதற்கான ஒரு சர்வதேச பணி மட்டுமே என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
