முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் ‘சிங்கப்பெண் அதிரடிப் படை’ – அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை: முதலமைச்சர் விஜயின் நேரடி கண்காணிப்பில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை இயங்கும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; பெண்களின் பாதுகாப்பினை மேம்படுத்தும் பொருட்டு, தடுப்பு மற்றும் பாதுகாப்பு உத்திகளை முதன்மை மற்றும் ஒற்றை இலக்காகக் கொண்டு செயல்படக் கூடிய, ஒரு சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும். ஆபத்தில் உள்ள பெண்களுக்கு உதவிடும் வகையில், இப்படையினரின் இருப்பை வெளிப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் மூலம் பெண்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும், இந்த சிறப்புப் படையை, போதுமான ஆளிநர்கள்/பணியாளர்கள் மற்றும் அதிநவீன வசதிகளுடன் மாநிலம் முழுவதும் உருவாக்கப்படும்”.

முதலமைச்சரின் அறிவிப்பினைத் தொடர்ந்து மேலே படிக்கப்பட்ட தனது கடிதத்தில் காவல்துறை இயக்குநர்/ காவல் படை தலைவர் அவர்கள் பெண்களின் பாதுகாப்பினை மேம்படுத்தும் பொருட்டு, தடுப்பு மற்றும் பாதுகாப்பு உத்திகளை முதன்மை மற்றும் ஒற்றை இலக்காகக் கொண்டு செயல்படக் கூடிய, ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்குதல் தொடர்பான ஆணை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் மேற்கூறிய சிறப்புப்படையின் செயல்பாடுகள் குறித்தும் கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அ) சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் செயல்பாடுகள்:
(i) குற்றச் சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ள இடங்களை கண்டறிந்து கண்காணித்தல், பொது இடங்களில் கண்காணிப்பு மற்றும் தங்கள் இருப்பை மேம்படுத்தி, சுற்றுக்காவல் பணிகள் மேற்கொண்டு, குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்து, பொது இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்குதல்.

(ii) பேருந்து நிறுத்தங்கள், இரயில் நிலையங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிக அளவில் செல்லக் கூடிய மற்றும் நெருக்கடி மிகுந்த பகுதிகளில், தங்கள் இருப்பை அதிக அளவில் வெளிப்படுத்தி, சட்டவிரோத செயல்களை தடுத்தல்.

(iii) புகார்கள் மீது விரைந்து உரிய நடவடிக்கை எடுத்தல்.

(iv) பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு, அவர்களது பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதுடன், இதர ஆதரவுகள் கிடைத்திட வகை செய்வது உள்ளிட்ட உதவிகளை உரிய நேரத்தில் செய்தல்.

(v) சமூக நலத்துறை, கல்வித் துறை, அரசு சாரா தொண்டு நிறுனங்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட முகமைகளுடன் ஒருங்கிணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், சமூகத்தில் பலதரப்பட்ட மக்களை ஒருங்கிணைத்து, பெண்களின் பாதுகாப்பினை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபடுதல்.

மேலே பத்தி-2ல் உள்ள காவல்துறை தலைமை இயக்குனரின் கருத்துருவினை அரசு கவனமுடன் ஆய்வு செய்து, பெண்களின் பாதுகாப்பினை மேம்படுத்தும் பொருட்டு, தடுப்பு மற்றும் பாதுகாப்பு உத்திகளை முதன்மை மற்றும் ஒற்றை இலக்காகக் கொண்டு செயல்படக் கூடிய, ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ உருவாக்கவும் முதற்கட்டமாக காவல்துறை தலைமையகத்தில் பின்வரும் பணியிடங்களுக்கு நிர்வாக ஒப்பளிப்பும் செய்து ஆணையிடுகிறது. இந்த ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும். சிறப்பு அதிரடிப் படையில் ஐ.ஜி., தலைமையில் ஒரு எஸ்.பி., 2 டிஎஸ்பி, 4 ஆய்வாளர்கள் இடம்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,

Related Stories: