வந்தவாசி, மே 9:வந்தவாசி அடுத்த ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிம்மன்(42), விவசாயி. இவரது நிலத்தின் அருகே அதே கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளன. இருவருக்கும் வரப்பு தகராறு காரணமாக முன்விரோதம் இருந்த நிலையில்,கடந்த 2ம் தேதி அன்று நரசிம்மன் தனது விவசாய நிலத்திற்கு செல்ல வரப்பு வழியாக சென்றதாக கூறப்படுகிறது.அப்போது அங்கிருந்த தங்கராஜ், நரசிம்மனை ஆபாசமாக பேசி வீண் தகராறு செய்து சரமாரியாக தாக்கினாராம். மேலும், கீழே தள்ளியதில் நரசிம்மனுக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த நரசிம்மனை உறவினர்கள் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதுகுறித்து கீழ்கொடுங்காலூர் சப்-இன்ஸ்பெக்டர் ஞானவேல் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள தங்கராஜ் தேடி வருகிறார்.
