திருவண்ணாமலை, மே 9:திருவண்ணாமலை மாவட்டம், பிளஸ் 2 பொதுத் தேர்வில் 92.87 சதவீத தேர்ச்சி பெற்று, மாநில அளவில் 32வது இடத்தை பிடித்திருக்கிறது. கடந்த ஆண்டைவிட ஒரு இடம் பின்தங்கி 32வது இடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 4ம் தேதி தொடங்கி, 25ம் தேதி வரை நடந்தது. அதைத்தொடர்ந்து, தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. அரசு தேர்வுத்துறை இணைய தளம் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளி தகவல் பலகைகளில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. மேலும், மாணவர்கள் பதிவு செய்திருந்த செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் மதிப்பெண் விபரம் அனுப்பப்பட்டது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 263 மேல்நிலைப் பள்ளிகளில், பிளஸ் 2 பொதுத் தேர்வினை 12,920 மாணவர்கள், 13,852 மாணவிகள் உள்பட மொத்தம் 26,772 பேர் எழுதியிருந்தனர்.
