திருவண்ணாமலை, ஆக.1: காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து, திருவண்ணாமலையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, குட்டி கரணம் அடித்து தங்கள் நூதன எதிர்ப்பை தெரிவித்தனர்.திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், மாதாந்திர விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டம் முடிந்ததும், அதில் பங்கேற்ற பெரும்பாலான விவசாயிகள், கலெக்டர் அலுவலகம் முன்பு கர்நாடக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து முழக்கமிட்டனர். நடுமன்றம் அளித்த உத்தரவின்படி, தமிழகத்துக்கான தண்ணீரை உடனடியாக திறந்துவிட வேண்டும், விவசாயிகளின் பிரச்னையில் அரசியல் ஆதாயம் தேடக்கூடாது என கண்டன முழக்கமிட்டனர். அதேபோல், மேகதாது அணை விவகாரத்திலும் கர்நாடக அரசு தொடர்ந்து தமிழக விவசாயிகளை வஞ்சிக்கிறது என்றனர்.
