மதுரை: வீடு என்பது ஒரு பெண்ணின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் கடைசிப் புகலிடம் என ஐகோர்ட் மதுரை கிளை கூறியுள்ளது.மதுரை மாவட்டம் கோவிலாங்குளத்தை சேர்ந்த கணவரை பிரிந்து வாழும் ஒரு பெண், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘கோவிலாங்குளம் கிராமத்தில் சொந்தமாக ஒரு நிலத்தை வாங்கி அதில் குடியிருந்து வருகிறேன். எனது வீட்டின் பக்கத்து நிலத்தின் உரிமையாளரான ஜேசன் தமிழ்செல்வன் என்பவர், எனது வீடு அவரது நிலத்தில் இருப்பதாகக் கூறி, வீட்டை ஜேசிபி மூலம் இடித்தார். இதுகுறித்து முறையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எல்.விக்டோரியா கவுரி பிறப்பித்த உத்தரவு: ஒரு வீடு என்பது வெறும் செங்கல் மற்றும் சாந்தால் ஆன கட்டிடம் மட்டுமல்ல. அது ஒரு பெண்ணின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் கடைசிப் புகலிடமாகும். சட்டத்தின் துணையின்றி, செல்வாக்கு படைத்த நபர்களால் ஒரு பெண்ணின் வீடு இடிக்கப்படுவது என்பது வெறும் சிவில் குற்றம் மட்டுமல்ல.
அது அரசியலமைப்பு சட்டத்திற்கே ஏற்பட்ட ஒரு காயம். நிலத்தின் மீது உரிமை கோரினாலும், மனுதாரரின் வீட்டை இடித்த செயல் சட்டவிரோதமானது. நிலத்தின் உண்மையான உரிமையாளராக இருந்தாலும், முறையாக சட்டத்தை பின்பற்றாமல், அந்த இடத்தில் குடியிருக்கும் ஒருவரை அங்கிருந்து வெளியேற்ற முடியாது. வீடு இடிக்கப்பட்டபோது போலீசார் வெறும் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாக கூறப்படுவது தவறு மட்டுமல்ல, அரசியலமைப்பு கடமையின் தோல்வி.
சமூகத்தில் வலிமை படைத்தவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதில் ஜனநாயகம் இல்லை, மாறாக, எளிய மக்கள் எப்படிப் பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதில் தான் உண்மையான ஜனநாயகம் உள்ளது. கண்ணியம் என்பது சலுகை அல்ல, அது உரிமை. சட்டத்திற்குப் புறம்பாக ஒரு பெண்ணின் கண்ணியத்தைச் சிதைக்க முயலும் எந்தச் செயலுக்கும் நீதிமன்றம் மிகக் கடுமையான பதிலடியைக் கொடுக்கும். வீட்டை இடித்தவர்கள் சேர்ந்து இடிக்கப்பட்ட அதே இடத்தில் மூன்று நாட்களுக்குள் வீட்டை மீண்டும் கட்டித் தர வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக, மூன்று பேரும் தலா ரூ.50 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும். இந்த வீட்டு மறுசீரமைப்புப் பணிகளை மதுரை கலெக்டர் கண்காணித்து, மனுதாரருக்குத் தேவையான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இந்தச் சம்பவம் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்குள் முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டார்.
