திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. திமுக கவுன்சிலர்கள் 10, நியமன உறுப்பினர் ஒன்று சேர்த்து 11 பேர், காங்கிரஸ் 2 கவுன்சிலர்கள், பாஜ, அதிமுக தலா ஒரு கவுன்சிலர் உள்ளனர். இதில் பேரூராட்சி தலைவராக 1வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் சியாமளா அறிவிக்கப்பட்டார். ஆனால், திமுக கவுன்சிலர்கள் ஒருமனதாக முடிவு செய்து 3வது வார்டு கவுன்சிலர் கல்பனாதேவியை தலைவராக தேர்ந்தெடுப்பதாக கூறினர். ஆனால், மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற திமுகவை சேர்ந்த வேட்பாளர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய உத்தரவிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து, பட்டிவீரன்பட்டி பேரூராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட கல்பனாதேவி தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட 1வது வார்டு கவுன்சிலர் சியாமளா தலைவராகவும், திமுகவை சேர்ந்த 3வது வார்டு கவுன்சிலர் கல்பனாதேவி துணை தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி விலகி தவெகவில் இணைந்தது. இதனை கண்டித்து திமுகவை சேர்ந்த தலைவர்கள் கண்டன அறிக்கைகளை வெளியிட்டனர். இந்நிலையில் பட்டிவீரன்பட்டி பேரூராட்சி தலைவர் சியாமளா தனது பதவியை நேற்று ராஜினாமா செய்து இதற்கான கடிதத்தை பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத்திடம் வழங்கினார்.
பதவியை ராஜினாமா செய்த சியாமளா கூறுகையில், ‘‘அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த தலைவர் பதவியை எனக்கு பெற்று தந்தார். தற்போது காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்துள்ளது. இதனால் எனது பதவியை ராஜினாமா செய்தேன். கடந்த 4 ஆண்டுகளாக பேரூராட்சி தலைவராக செயல்பட்ட எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி’’ என்றார்.
