காரைக்குடி மாநகராட்சியில் சங்கராபுரம் பகுதியில் போலீஸ் ஸ்டேசன்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

காரைக்குடி, மே 7: காரைக்குடி மாநகராட்சியில் உள்ள சங்கராபுரம் பகுதிக்கு உட்பட்ட என்ஜிஜிஓ காலனியில் நடக்கும் குற்ற சம்பவங்களை தடுக்க, புறக்காவல்நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரைக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சங்கராபுரத்திற்கு உட்பட்டு பாண்டியன் நகர், வீட்டு வசதி வாரியம், வி.ஏ.ஓ காலனி, போக்குவரத்து நகர், என்ஜிஜிஓ காலனி, கம்பன் நகர், டிப்பார்மெண்ட் டிரைவர்ஸ் காலனி, ஓஏ காலனி, முன்னாள் படைவீரர் காலனி, தாசில்தார் நகர், கேகே நகர், மாருதி நகர், அருணா நகர் மற்றும் பல்வேறு பகுதிகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. விஸ்தரிப்பு பகுதியாக உள்ளதால் வழிப்பறி மற்றும் வீட்டை உடைத்து திருட்டு, டூவீலர் திருட்டு அவ்வப்போது நடப்பது வாடிக்கையாக உள்ளது.

இங்கு நடக்கும் திருட்டு, விபத்து உள்பட அனைத்து சம்பவங்களுக்கும் 15 கி.மீ தொலைவில் உள்ள குன்றக்குடி போலீஸ் ஸ்டேசனுக்கு பொதுமக்கள் செல்லவேண்டிய நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் போலீஸ் ஸ்டேசன் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். வளர்ந்து வரும் இப்பகுதியில் மக்கள் தொகையை கணக்கில் கொண்டு, சங்கராபுரத்துக்கு என தனியாக போலீஸ் ஸ்டேசன் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூகஆர்வலர் வெங்கட்பாண்டி கூறுகையில், ‘‘சங்கராபுரம் ஊராட்சி பகுதியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். குற்ற நிகழ்வுகள், விபத்துகள் ஏற்பட்டால் அதிக தூரம் உள்ள குன்றக்குடி போலீஸ் ஸ்டேசனுக்கு செல்ல வேண்டியதாக உள்ளதால், காலதாமதம் மற்றும் அலைச்சல் ஏற்படுகிறது. இப்பகுதியில் உள்ள பல்வேறு குடும்பங்களின் தலைவர்கள், வெளிநாடுகளில் வேலை பார்த்து வருவதால் பெண்களும், குழந்தைகள் மட்டுமே வசித்து வருகின்றனர்.

மேலும் நான்கு வழிச்சாலைக்கு அருகே இப்பகுதி உள்ளதால், பல்வேறு குற்றச்சம்பங்கள் நடக்க வாய்ப்பு அதிக அளவில் உள்ளது. இப்பகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மேலும் அரசினர் மாணவர் விடுதிகள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம், பதிவுத்துறை அலுவலகங்கள் சட்டக்கல்லூரி, ஐ.டி பார்க் போன்றவை அமைந்துள்ளன. எனவே வளர்ந்து வரும் இப்பகுதியில் குற்றசம்பங்களை தடுக்க போலீஸ் ஸ்டேசன் அமைக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: