கும்பகோணம், மே 7: திமுக கூட்டணியில் இருந்து, திடீர் என்று காங்கிரஸ் வெளியேறியதை தொடர்ந்து கும்பகோணத்தில் மேயர் பதவி ஆட்டம் காண தொடங்கி உள்ளது. கும்பகோணம் மாநகராட்சியில் அதிக பலம் கொண்ட திமுக கவுன்சிலர்கள் அவரை பதவியில் இருந்து தூக்கி எறிய திட்டமிட்டு உள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. கும்பகோணம் மாநகராட்சிக்கான தேர்தல் கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்றது. அதில் திமுக 39, காங்கிரஸ் 2, அதிமுக 3, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஐயூஎம்எல், விசிக தலா ஒன்றில் வெற்றி பெற்றது. இதனால் கும்பகோணம் மாநகராட்சியில் திமுக கூட்டணியின் பலம் 45 ஆகவும், அதிமுக 3 ஆகவும் இருந்தது. இதனை தொடர்ந்து 48 கவுன்சிலர்களில் கும்பகோணத்திற்கான முதல் மேயர் தேர்தெடுக்கும் வாக்கெடுப்பு கும்பகோணம் மாநகராட்சி மன்றத்தில் நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 48 வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கும்பகோணம் மாநகராட்சி 17வது வார்டில் போட்டியிட்ட ஆட்டோ தொழிலாளியான சரவணனை, மேயர் வேட்பாளராக மதச்சார்பற்ற கூட்டணி கட்சி அறிவித்தது. மேயருக்காக அவர் மட்டுமே அறிவிக்கப்பட்ட நிலையில், யாரும் கும்பகோணம் மாநகராட்சி மேயர் பொறுப்பிற்கு போட்டியிட வில்லை. இதன் காரணமாக மேயர் பதவிக்கு போட்டியின்றி சரவணன் தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து மேயராக சரவணன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு பதவி ஏற்றார்.
துணை மேயருக்கான தேர்வில் திமுகவை சேர்ந்த 26வது வார்டில் வெற்றி பெற்ற சு.ப.தமிழழகன் போட்டியின்றி குதேர்வு செய்யப்பட்டார்.
கும்பகோணம் மாநகராட்சிக்கு தேர்வு செய்யப்பட்ட புதிய மேயர் சரவணன், துணை மேயர் சு.ப.தமிழாகன் ஆகியோரை அப்போதைய மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் வெள்ளி செங்கோல் கொடுத்து பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இதனைத் தொடர்ந்து மாமன்ற கூட்டங்கள் தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் திமுக கூட்டணியில் 45 ஆகி இருந்ததாலும், எதிர்கட்சியான அதிமுக 3 கவுன்சிலர்களை மட்டுமே கொண்டிருந்ததாலும், மாநகராட்சி கூட்டத்தின் போது எளிதாக அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டு வந்தது. ஆயினும் நாளடைவில், திமுகவினருக்கும், காங்கிரஸ் மேயர் சரவணனுக்கும் மன்ற பொருட்களுக்கு ஒப்புதல் அளிப்பது, மாநகராட்சியில் நடைபெற்று வந்த பணிகளில் தொய்வு உள்ளிட்ட பல்வேறு குறைகளை வலியுறுத்தி தொடர்ந்து பிரச்சினைகள் இருந்து வந்தது. இதனால் பலமுறை சமரச பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. ஆயினும் சலசலப்புகள் தீர்ந்தபாடில்லை.
இந்நிலையில் நடந்து முடிந்துள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகித்து போட்டியிட்டது. ஆனால் தேர்தலின் முடிவில் தவெக அதிக தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. ஆயினும் ஆட்சி அமைக்க போதிய பெருபான்மை இல்லாத நிலையில் உள்ளது. அப்போது திடீர் என்று காங்கிரஸ் கட்சி, திமுக கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் விஜயை சந்தித்து ஆதரவு தெரிவித்து உள்ளனர். இது தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. திமுக கூட்டணியில் நின்று திமுகவினர் உழைப்பில் வெற்றி பெற்று விட்டு, இப்போது காங்கிரஸ் கட்சி, தவெகவிற்கு ஆதரவு என்று, திமுகவிற்கு துரோகம் செய்து விட்டது என்று திமுக தொண்டர்கள் மட்டும் அல்ல, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் ஆவேசமடைந்துள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக கும்பகோணம் மாநகராட்சி மாமன்றத்தில் மொத்தமுள்ள 48 மாமன்ற உறுப்பினர்களில், திமுக 39, காங்கிரஸ் 2, அதிமுக 3, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஐயூஎம்எல், விசிக தலா ஒன்று என்ற கணக்கில் கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் திமுக கூட்டணியில் இருந்து தற்போது காங்கிரஸ் விலகி இருந்தாலும், திமுக கூட்டணியின் பலம் 43 ஆக உள்ளது.
தற்போது தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறி உள்ளது. இதனால் கும்பகோணம் மாநகராட்சி மேயராக காங்கிரஸ் உறுப்பினர் சரவணன் மேயர் பதவி ஆட்டம் காண தொடங்கி விட்டது. திமுகவின் முழு தயவோடு தமிழகத்தின் ஒரே ஒரு காங்கிரஸ் கட்சி மேயராக இருந்து வரும் கும்பகோணம் காங்கிரஸ் மேயர் சரவணன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர திமுக கவுன்சிலர்கள் முடிவெடுத்து உள்ளதாக தெரிகிறது. நம்பிக்கை இல்லாத தீர்மானத்தில் காங்கிரஸ் கட்சி சரவணனை நீக்கி விட்டு, துணை மேயராக உள்ள திமுக சு.ப.தமிழழகனை மேயராக்க திமுக கவுன்சிலர்கள் ஒருமனதாக முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இனி வரப்போகும் கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்று அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
