தஞ்சாவூர், மே 7: தஞ்சை பழைய நிலையத்தில் ஏற்கனவே இருந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 13 ஆயிரத்து 469 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.14.44 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டில் திறக்கப்பட்ட இந்த பஸ் நிலையத்தில் 39 பஸ் நிறுத்தங்கள், 93 கடைகள், கழிப்பறைகள், போலீஸ் உதவி மையம், பயணிகள் காத்திருப்போர் அறை உள்ளிட்டவை கட்டப்பட்டன. இந்த பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையம், மருத்துவக்கல்லூரி, வல்லம், திருவையாறு, பாபநாசம், ஒரத்தநாடு, அம்மாப்பேட்டை, நாஞ்சிக்கோட்டை உள்ளிட்ட ஊர்களுக்கு 80 நகர பஸ்களும், 53 மினி பஸ்களும் வந்து செல்கின்றன.
இதேபோல் கும்பகோணம், அரியலூர் போன்ற புறநகர் பஸ்களும் வருகின்றன. இதனால் பஸ் நிலையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் அதற்கு ஏற்ப இந்த பஸ் நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள் செய்யப்படவில்லை என்ற புகார் நிலவுகிறது. நாளுக்கு நாள் இடநெருக்கடி அதிகரித்து வருகிறது. இதனால் தரையில் தான் பயணிகள் அமர வேண்டிய நிலை உள்ளது. அதற்கு கூட இடையூறு ஏற்பட்டு வருகிறது. அதாவது கடைகளை விரிவுபடுத்தி பொருட்களை பயணிகளுக்கு இடையூறாக வைத்துள்ளனர். மேலும் பஸ்களுக்கு இடையூறாக இருசக்கர வாகனங்களும் நிறுத்தப்பட்டு வருகின்றன. இப்படி பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் பயணிகள் பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
அப்படி வரும் பயணிகள் மேலும் சிரமத்திற்கு ஆளாவதுடன், நோய்தொற்று ஏற்படும் வகையிலான சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. அதாவது நேற்று அம்மாப்பேட்டை, மருத்துவக்கல்லூரி, ஒரத்தநாடு போன்ற ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் நிற்கக்கூடிய பகுதிகளில் கழிவு நீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது. அந்த கழிவுநீரில் மிதித்து கொண்டு தான் பயணிகள் செல்ல வேண்டிய அவலநிலை இருந்தது. குழந்தைகளை அழைத்து கொண்டு சென்ற பெண்கள், கர்ப்பிணிகளும் இந்த கழிவுநீர் செல்லக்கூடிய பகுதியில் மூக்கை பொத்திக் கொண்டு பஸ்சுக்காக காத்து நிற்கின்றனர். மேலும் பஸ்கள் வந்தவுடன் துர்நாற்றம் வீசும் கழிவுநீரில் மிதித்து கடந்து சென்று பஸ்களில் ஏற வேண்டிய அவல நிலை உள்ளது. இதனால் பஸ் நிலையத்தில் துர்நாற்றம் வீசுவதும், கழிவு நீரை மிதித்து விட்டு பஸ்களில் ஏறுவதால் பஸ்களுக்குள்ளும் துர்நாற்றம் வீச தொடங்குகிறது.
இதனால் பஸ்களில் ஏற்கனவே அமர்ந்திருக்கும் பயணிகளும் அவஸ்தைக்கு உள்ளாகின்றனர். பஸ் டிரைவர்களும் கழிவு நீர் ஓடும் பகுதியிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றனர். கழிவு நீரின் துர்நாற்றத்தால் தொற்று நோய் பரவுமோ என்ற அச்சத்துடன் பயணிகள் தஞ்சை பஸ் நிலையத்திற்கு வந்த செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகத்தின் கழிவு நீர் வழிந்தோடுவதை தடுத்து நிறுத்தி பயணிகளின் அவஸ்தையில் இருந்து விடுதலை பெற்றுத்தர வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
