திண்டுக்கல், மே 7: திண்டுக்கல் அருகே குளத்தூர் பாறைப்பட்டி ஆர்.வி.எஸ்.நகரை சேர்ந்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் (30). இவரது மனைவி நந்தினி (28). இவர்களுக்கு இடையே கடந்த சில நாட்களாக குடும்பப் பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன் தினம் மீண்டும் கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து நந்தினியின் தம்பி நவீன் குமார் (25), தாமஸ் ஆல்வா எடிசனிடம் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நவீன்குமார் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தாமஸ் ஆல்வா எடிசனை வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த தாமஸ் ஆல்வா எடிசினை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன்,சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
