×

நிறமற்ற லென்ஸ் தொலைநோக்கி தயாரிப்பு கருத்தரங்கம்

நாமக்கல், மே 6: நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நிறமற்ற லென்ஸ் தொலைநோக்கி தயாரிக்கும் கருத்தரங்கு நடந்தது. இதில், 50 ஆசிரியர்கள் கலந்து கொண்டு, 50 நிறமற்ற லென்ஸ் தொலை நோக்கிகளை உருவாக்கினர். தொடக்க விழாவில் நிறுவன விரிவுரையாளர் சிவபெருமான் வரவேற்றார்.

நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் தலைமை வகித்து பேசுகையில், நிறமற்ற லென்ஸ் தொலை நோக்கியானது பள்ளிகளில் வானியல் மன்றங்கள் உருவாக அடித்தளமிடும். நிலவை ஆய்வு செய்யவும், வியாழன் கோளில் உள்ள கலிலியன் நிலவுகளைக் காணவும் இரண்டு நட்சத்திரங்கள் மிக அருகில் இருப்பதை வேறுபடுத்தி பார்க்கவும் பயன்படும் என்றார்.

நிறமற்ற லென்ஸ் தொலைநோக்கி தயாரிப்பு வல்லுநர் அருளானந்தம் பேசுகையில், நிறமற்ற லென்ஸ் தொலைநோக்கியில் சிறப்பு வாய்ந்த இருகூறு புறவில்லையை பயன்படுத்துவதால், சிவப்பு மற்றும் நீலஒளி ஒரே களத்தில் குவியும். இதன் மூலம் கூர்மையான, தெளிவான மற்றும் நிறம் சரிசெய்யப்பட்ட படங்கள் கிடைக்கும் என்றார்.

நிகழ்ச்சியில் கல்வி மற்றும் சமூக பணியாற்றி வரும் நாமக்கல் பவுல்ட்ரி சங்க உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், சண்முகம் மற்றும் பிரபாகரன் ஆகியோருக்கு புதுச்சேரி, ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருதினை வெங்கடேசன் வழங்கினார். கருத்தரங்கில் நாமக்கல், சேலம், கரூர், கோயம்புத்தூர், திருவண்ணாமலை, திருப்பூர் போன்ற மாவட்டங்களிலிருந்து 50 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். வெள்ளக்கல்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் சுந்தரம் நன்றி கூறினார். ஏற்கனவே நடத்தப்பட்ட பணிமனையில் 82 ஆசிரியர்கள் தொலை நோக்கியை உருவாக்கி பள்ளிகளுக்கு எடுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Tags : Namakkal ,Namakkal District Teachers Education and Training Institute ,
× RELATED டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் 2 வாலிபர் பலி