நாமக்கல், மே 6: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியில் நோட்டாவுக்கு 4465 பேர் வாக்களித்துள்ளனர். இது கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலைவிட குறைவாகும். தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல், கடந்த மாதம் 23ம் தேதி நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பரமத்திவேலூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் 91 சதவீத வாக்குகள் பதிவானது. இந்த வாக்குகள் நேற்று முன்தினம் திருச்செங்கோடு விவேகானந்தா பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
இதில், மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக, பரமத்திவேலூர் தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. இங்கு போட்டியிட்ட எம்எல்ஏ சேகர், 2வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், சேந்தமங்கலம், நாமக்கல் ஆகிய 5 சட்டமன்ற தொகுதியிலும் தவெக வெற்றி பெற்றுள்ளது. இந்த கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 5 வேட்பாளர்களும் முதன் முறையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
நாமக்கல் தொகுதியில் வெற்றி பெற்ற திலீப், சேந்தமங்கலத்தில் வெற்றிபெற்ற சந்திரசேகர், திருச்செங்கோட்டில் வெற்றி பெற்ற அருண்ராஜ், குமாரபாளையத்தில் வெற்றி பெற்ற விஜயலட்சுமி, ராசிபுரத்தில் வெற்றி பெற்ற லோகேஸ் தமிழ்செல்வன் ஆகிய 5 பேரும் இந்த சட்டமன்ற தேர்தலில் தான் முதன் முறையாக போட்டியிட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 132 பேர் போட்டியிட்டனர்.
இவர்கள் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லாமல் நோட்டாவுக்கும் சிலர் வாக்களித்துள்ளனர். சட்டமன்ற தொகுதி வாரியாக நோட்டாவுக்கு கிடைத்த வாக்குகள் விபரம்: அடைப்புகுறிக்குள் கடந்த 2021 தேர்தலில் நோட்டாவுக்கு பதிவான வாக்குகள் விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது.ராசிபுரம்- 863 (2110), நாமக்கல் 760 (1285), சேந்தமங்கலம் 1211 (2058), திருச்செங்கோடு 517 (1618), குமாரபாளையம் 665 (1342), பரமத்திவேலூர் 449 (954) என மொத்தம் 6 தொகுதியிலும் 4465 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது, மாவட்டத்தில் உள்ள 6 தொகுதியிலும், 9367 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர். இந்த முறை நோட்டாவுக்கு வாக்களித்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
