பெரம்பலூர், மே 4: வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதி அட்டையுடன் வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். கைபேசிகள், வாகனங்களை உள்ள அனுமதிக்க கூடாது. பெரம்பலூர் வாக்கு எண்ணும் மையத்தைப் பார்வையிட்ட பெரம்பலூர் மாவட்ட எஸ்பி பிரபாகர் கடும் உத்தரவு. தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட எஸ்பி பிரபாகர் நேற்று பெரம்பலூர் நகருக்கான புறவழிச் சாலையில் அமைந்துள்ள பெரம்பலூர் (தனி) மற்றும் குன்னம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையமான ஆதவ் பப்ளிக் பள்ளியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விரிவாக விளக்கினார்.
இந்த ஆய்வின் போது, வாக்கு எண்ணிக்கை மையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்புடன் செயல்பட வேண்டும். மையத்திற்குள் அனுமதி அட்டையுடன் வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். சிசிடிவி கண்காணிப்பு, மெட்டல் டிடெக்டர் சோதனை, தீவிர சோதனை போன்றவை கட்டாயமாக மேற்கொள்ளப்பட வேண்டும். கைபேசிகள், மற்றும் வாகனங்களை உள்ள அனுமதிக்க கூடாது.
மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் தீவிர கண்காணிப்புடன் செயல்பட வேண்டும். சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுவதில் எந்த விதத் தளர்வும் இருக்கக் கூடாது. காவல்துறையினர் அனைவரும் விழிப்புடன் செயல்பட்டு, பொதுமக்கள் மற்றும் தேர்தல் பணியாளர்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
