பெரம்பலூர், மே4: பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23ம்தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிவடைந்தது. இதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் மையமாக பெரம்பலூர் நகருக்கான புறவழிச்சாலையில் இயங்கி வரும் ஆதவ் பப்ளிக் பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அங்கு பெரம்பலூர் (தனி) மற்றும் குன்னம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்ட 732 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நாளான கடந்த 23ஆம் தேதி வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் விவிபேட் கருவிகள் ஆகியன, பெரம்பலூர் (தனி) மற்றும் குன்னம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கென்று தனித்தனியே ஒதுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த வாக்கு எண்ணும் மையம் மூன்றடுக்கு பாதுகாப்புடன் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை வேட்பாளர்களின் முகவர்கள் பார்வையிடவும் போதிய வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
