பாடாலூர், மே 4: கோடை உழவால் மண்ணின் ஈரப்பதம், மகசூல் அதிகரிக்கும் என்று ஆலத்தூர் விவசாயிகளுக்கு வேளாண்மை ஆலத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ரமேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சித்திரை மாத உழவு பத்தரை மாற்று தங்கம் என்ற முன்னோர்களின் வாக்குக்கு ஏற்ப விவசாயிகள் தங்கள் நிலங்களில் கோடை உழவு செய்வதால் நிலம் வளமாவதுடன் விதைக்கும் பயிர்கள் நன்றாக வளர்ந்து நல்ல மகசூல் கிடைக்க வழிவகை செய்கிறது.
கோடைகாலத்தில் உழவு செய்யும் போது மண் முதலில் வெப்பமாகி பின்னர் குளிர்வதால் மண்ணின் பௌதீக தன்மை மற்றும் கட்டுமானம் பலப்படுகிறது. மேலும் கோடை உழவு மேற்கொள்ளும் பொழுது வயலின் சரிவிற்கு குறுக்கு, நெடுக்காக உழவு செய்வதால் வயலில் உள்ள சத்துக்கள் மழை நீரில் அடித்து செல்லப்படாமலும் மண் அரிப்பை தடுக்கவும் உதவுகிறது. கோடை உழவு செய்யப்படும் பொழுது வயலில் உள்ள பூச்சிகளின் முட்டைகள், லார்வாகள், நோய் தாக்கத்தை ஏற்படுத்தும் பூஞ்சனங்களை அழிக்கிறது. இதுதவிர களை செடிகளும் அழிக்கிறது.
கோடை உழவு செய்வதனால் மழை நீர் வயலில் அதிக அளவில் சேகரிக்கப்பட்டு மண்ணின் ஈரப்பதம் அதிகரிக்க உதவுகிறது. மேலும் அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோள வயல்களின் கழிவுகளை தீயிட்டு எரிக்காமல் கோடை உழவு செய்தார், அவை மண்ணில் கலந்து, மண்ணின் கரிம சத்து அதிகரித்து பயிர் வளர்ச்சி மற்றும் மண்ணின் நீர் பிடிப்பு தன்மையை அதிகரிக்கிறது. எனவே ஆலத்தூர் வட்டார விவசாயிகள் கோடை உழவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
